1. இதர வாசிப்பு
  2. »
  3. இலக்கியம்
  4. »
  5. பேட்டிகள்
Written By Webdunia

பயங்கரவாதம் என்றால் என்ன? - நாம் சாம்ஸ்க்கி

இரண்டு விதமான நிலைகளைக் குறித்து நான் ஊகம் செய்யப் போகிறேன். முதலாவது ஊகம் என்னவென்றால் செப்டம்பர் 11 தாக்குதல் அச்சமூட்டுகிற கொடுஞ்செயல் மட்டுமல்லாமல் வரலாற்றில் பேரழிவை ஏற்படுத்திய நிகழ்வு. மனித உயிர்களை உடனடியாக பலிகொண்ட குற்றம். இரண்டாவதாக ஊகம் நமக்கெதிரானதாகவோ அல்லது பிறருக்கெதிரானதாகவோ இருக்கும்போது கூட இதுபோன்ற குற்றங்களைக் குறைப்பதே நமது குறிக்ககோளாக உள்ளது என்கிற ஊகம். இந்த இரண்டு ஊகங்களையும் நீங்கள் ஒத்துக்கொள்ளவிட்டால் நான் உங்களிடம் ஏதும் பகிர்ந்து கொள்ள முடியாது. இந்த நிலைகளை ஒத்துக்கொள்ளும்பட்சத்தில் நமது மனதில் பல கேள்விகள் எழுகின்றன.

முக்கியமானதொரு கேள்வி இப்போது சரியாக என்ன நிகழ்ந்து கொண்டிருக்கின்றன? இந்நிகழ்வுகளில் நமக்கு குறிப்பால் உணர்த்தும் ஏதேனும் உள்ளதா? அவை குறித்து நாம் என்ன செய்ய முடியும்?

செப்டம்பர் 11 அன்று என்ன நடந்ததோ அது வரலாற்றில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய வரலாற்று நிகழ்வு என்கிற பரவலான கருத்து தொடர்பானது இரண்டாவது கேள்வி இந்த கருத்து உண்மையானது என்று நான் நினைக்கிறேன். ஆனால் அதனை வரலாற்று நிகழ்வு என்று சொல்வதைத் தொடர்ந்து ஒரு கேள்வி, எவ்வாறு சரியாக அதுவொரு வரலாற்று நிகழ்வாகிறது? மூன்றாவது கேள்வி பயங்கரவாதத்திற்கு எதிரான போர் பற்றியது பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்றால் என்ன? அது சரியாக எதைத் தெரிவிக்கிறது. இதோடு தொடர்புடைய மற்றொரு கேள்வி பயங்கரவாதம் என்றால் என்ன? நான்காவதாக கூர்மையானதும் முக்கியமானதுமான கேள்வி செப்டம்பர் 11ல் நடந்த குற்றங்களின் தோற்றுவாய் என்ன? என்பது. ஐந்தாவதாக பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் எத்தகைய கொள்கை முடிவுகளை எடுக்கப்போகிறோம்? எவ்வாறு சூழ்நிலையை சமாளிக்கப்போகிறோம், எதிர்கொள்ளப் போகிறோம்?

1. தற்போது என்ன நடந்து கொண்டிருக்கிறது?

"முப்பது முதல் நாற்பது லட்சம் மக்கள் பட்டினி கிடக்கிறார்கள்" ஆப்கானிஸ்தானிலுள்ள சூழ்நிலையை பற்றி சொல்கிறேன். செப்டம்பர் 11-க்கு முன்பு 70 முதல் 80 லட்சம் மக்கள் பட்டினியின் விளிம்பிலிருந்ததாக நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை தெரிவிக்கிறது. அவர்கள் பன்னாடடு உதவியுடன் உயிர்ப்பிடித்துக் கொண்டிருந்தார்கள். செப்டம்பர் 16-ம் தேதி, ஆப்கானிஸ்தான் பொது மக்ளுக்கு, உணவு மற்றும் அன்றாடத் தேவைப் பொருட்களை அளித்து வந்த சரக்கு வண்டிகளின் போக்குவரத்தை நிறுத்தி விடுமாறு பாகிஸ்தானுக்கு அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது என்கிறது "தி டைம்ஸ்". எனது அறிவுக்கு எட்டியவரை அமெரிக்காவிலோ அல்லது ஐரோப்பாவிலோ இப்படி லட்சக்கணக்கான மக்கள் மீது பட்டினியைத் திணிக்கிற போக்கை எதிர்த்து எவ்விதமான எதிர்வினையும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. அதே வேளையில் அமெரிக்க ராணுவத் தாக்குதல் பற்றிய அச்சம் பன்னாட்டு உதவிக்குழுக்களை வெளியேற வைத்துள்ளது. அதனால் பசிமீட்புப் பணிகள் மேலும் ஊனமடைந்துள்ளன.

மூன்று வாரங்களுக்கு பிறகு அக்டோபர் முதல் வாரத்தில் "உலக உணவுத் திட்டம்" என்கிற பன்னாட்டு அவைத் திட்டம் தனது சேவையைத் துவக்கியுள்ளது. அவர்களிடம் மிகக் குறைந்த அளவில்தான் உணவு பொருட்கள் உள்ளன. அவர்களிடம் பன்னாட்டு உதவியாளர்களும் இல்லை. எனவே அவர்களின் உணவு விநியோகத்தில் இடையூறு ஏற்பட்டுள்ளது.

ஏவுகணைத் தாக்குதல் நடந்த முதல்வாரத்தில் "தி நியூயார்க் டைம்ஸ்" கடைசிப் பக்கத்தில் வெளியிட்டிருந்த செய்திக்குறிப்பில், பன்னாட்டு அவையின் கணக்குப்படி ஒரு துண்டு ரொட்டிக்காக அவதிப்படுகிற ஆப்கானியர்களின் எண்ணிக்கை எழுபத்தைந்து லட்சமாக ஆகிவிடும் என்றும் வரப்போகின்ற குளிர்காலத்தில் பல பகுதிகளுக்குச் சென்று உணவு விநியோகிப்பது தடைபட்டுவிடும் என்றும் குறிப்பிட்டுள்ளது. குண்டு மழை பொழிந்து கொண்டிருப்பதால் விநியோக விகிதம் தேவைப்படுவதில் பாதி அளவே நடக்கிறது. மேற்கத்திய நாகரிகம் முப்பது முதல் நாற்பது லட்சம் மக்கள் படுகொலை செய்யப்படுவதை வேடிக்கையோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது என்பதையே இது காட்டுகிறது. குறிப்பிட்ட அதே நாளில் மேற்கத்திய நாகரிகத்தின் தலைவர் (ஜார்ஜ் புஷ்) குற்றம் சாட்டப்பட்டுள்ள பின்லேடனை ஒப்படைப்பது பற்றிய பேச்சுவார்த்தைகளை நிராகரிக்கிறார். பின்லேடனை ஒட்டுமொத்த சரண் அடையச் சொல்வதற்கான காரணங்களின் வாய்மையை நிலைநாட்ட வேண்டும் என்ற வேண்டுகோள்களையும் வெறுப்புடன் ஒதுக்கித் தள்ளிவிடுகிறார். அதே நாளில்தான், பன்னாட்டு அவையின் உணவுப்பொருள் உதவிக்கான சிறப்புத் தொடர்பாளர், குண்டு வீசுதலை நிறுத்தி மில்லியன்கணக்காக அப்பாவி மக்களை மீட்க உதவுங்கள் என்று அமெரிக்காவிடம் மன்றாடினார். அது செய்தி ஆகவில்லை.

இவற்றை கவனித்துப் பார்த்தால் ஒருவிதமான, மௌன இனப்படுகொலை நடப்பது போல் தோன்றுகிறது. நாம் பங்கு வகிக்கிற இந்த மேட்டிமைக் கலாச்சாரத்தின் உள்நோக்கத்தை பற்றி தெரிவிக்கிறது. அடுத்த சில மாதங்களில் பல லட்சம் மக்களைப் படுகொலை செய்வதற்கானத் திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தவிருப்பதின் அறிகுறியாக இதனை அனுமானிக்கலாம். ஆனால் தற்போது நடந்து கொண்டிருப்பதில் பெரும்பகுதி நம்முடைய கட்டுப்பாட்டில்தான் உள்ளது. நடந்து கொண்டிருப்பவற்றைப் பாதிக்கின்ற வகையில் நம்மால் செயல்பட முடியும்.


2. ஏன் அது ஒரு வரலாற்று நிகழ்வு?

செப்டம்பர் 11 அன்று நடந்த வரலாற்று நிகழ்வு என்பது பற்றி நம் கேள்வியைத் திருப்புவோம். அது ஒரு வரலாற்று நிகழ்வு; ஏனென்றால் அதனால் ஒரு மாற்றம் உருவாகி உள்ளது. எந்த பகுதிக்கு துப்பாக்கிகளின் குறிவைக்கப்பட்டதோ அந்த திசையிலிருந்து மாற்றம் நிகழ்ந்துள்ளது. இது புதியது; அடிப்படையாகவே புதியது. பழைய முறைகளிலிருந்தும் புதியது. ஒன்றுபட்ட அமெரிக்காவிடம் தேசிய எல்லை தாக்குதலுக்கு உள்ளான நிகழ்வு. பிரிட்டன் வாஷிங்டனை தீக்கிரையாக்கின 1814-ல் கடைசியாக நடந்தது. மற்றபடி கடந்த 200 வருடங்களில், அமெரிக்கர்களான நாம் தான், லட்சக்கணக்கில் ஆதிகுடிமக்களை வெளியேற்றியும் - அழித்தொழித்தும் உள்ளோம். மெக்ஸிகோவின் பாதியைப் பிடித்து வைத்துள்ளோம். கரீபியன் மற்றும் மைய அமெரிக்காவின் பகுதிகளில் அழிவும், அட்டூழியம் நடத்தியும் சில காலம் முன்பு ஹவாய்த்தீவை பிடித்தடக்கிக் கொண்டும்; பிலிப்பைன்ஸை அடக்குவதற்கு நடத்த போரில் 1,00,000-க்கும் மேற்பட்ட பிலிப்னோக்களைக் கொன்றும் வந்திருக்கிறோம். இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு உலகம் முழுமையும் சுற்றி இத்தகையச் செயல்கள் பல்வழிகளில் நடைபெறுகின்றன என்பதை நான் விவரிக்க இயலாது. ஆனால் எப்போதுமே வேறு யாரையாவது கொலை செய்கிறோம். வேறு எங்காவது போர் புரிகிறோம். எப்போதுமே மற்றவர்கள்தான் படுகொலை செய்யப்பட்டு வருகிறார்கள்.

இதன் காரணமாக ஐரோப்பாவைப் பொறுத்தமட்டில் இந்த மாற்றம் மேலும் அதிக முக்கியத்துவம் பெறுகிறது. ஏனென்றால், அதன் வரலாறு நம் வரலாற்றை விடக் கொடுமையானது. நாம் அடிப்படையில் அமெரிக்காவின் ஒரு கிளைதான். நூற்றாண்டுகளாக ஐரோப்பா சர்வசாதாரணமாக உலகம் முழுவதும் மக்களைக்கொன்று குவித்து வந்திருக்கிறது. இப்படித்தான் உலகை அது வெற்றி கொண்டது; மற்றபடி, குழந்தைகளுக்கு சவ்வுமிட்டாய் கொடுப்பது போல அல்ல. ஒருவரை ஒருவர் பலியாக்குவதுதான் ஐரோப்பாவின் முதல் தர விளையாட்டாக பல நூற்றாண்டுகள் நீடித்து வந்திருக்கிறது. 1945-ல் இந்த விளையாட்டு முடிவுக்கு வரக்காரணம், அடுத்தமுறை அவர்கள் இந்த ஆட்டத்தை விளையாட நேர்ந்தால் முழு உலகமுமே அழிந்துவிடும் என்பதால்தான்.

இந்த படுபயங்கரமான கொலையுகம் முழுவதும் ஐரோப்பியர்கள் மாறி, மாறி பலிபோட்டுக் கொண்டார்கள் அல்லது ஐரோப்பியர்கள் பிறரைக் கொன்று குவித்தார்கள். காங்கோ பெல்ஜியத்தைத் தாக்கவில்லை; இந்தியா இங்கிலாந்து மீது போர் தொடுக்கவில்லை; அல்ஜீரியா பிரான்சோடு வலுச்சண்டைக்கு போகவில்லை. ஐரோப்பியர்கள் பிறரைக் கொல்வதுதான் ஒரே சீராக எங்கும் நடந்தது.

முதல் தடவையாக துப்பாக்கிகள் வேறு திசை நோக்கிக் குறி வைத்தன. நீங்கள் கையில் சாட்டையை வைத்திருக்கிறீர்களா அல்லது காலங்காலமாக சாட்டையடி பட்டுக்கொண்டு இருக்கிறீர்களா என்பதைப் பொறுத்துதான் உலகின் வித்தியாசம் தெரிகிறது. எனவே, ஐரோப்பாவிலும், இவ்விடம் உட்பட அதன் கிளைகளிலும் ஏற்பட்டிருக்கும் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் புரிந்து கொள்ள முடிகிறது.

3. பயங்கரவாதத்துக்கு எதிரானப் போர் என்றால் என்ன?

"பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்றால் என்ன?" இது ஒருபுறமிருக்கும் கேள்வி "பயங்கரவாதம் என்றால் என்ன?" இது மற்றொருக் கேள்வி. பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்று சொல்லப்படுவது காட்டுமிராண்டிகள் பரப்புகிற ஒரு வித புற்றுநோய்க்கும் எதிரானப் போராட்டம் போல; ஒழுங்கீனமானப் பிறவிகள் ஒப்பற்ற நாகரிகம் மீது செலுத்துகிற தாக்குதல் போல மேல்தட்டுகளில் சித்தரிக்கப்படுகிறது. நான் சொல்லப்போகிற வார்த்தைகள் அதிபர் ரேகனும் அவருடைய உள்துறைச் செயலாளரும் 20 வருடங்களுக்கு முன்பு உதிர்த்தவை. ரேகன் அரசு 20 வருடங்களுக்கு முன்பு "பன்னாட்டுப் பயங்கரவாதத்துக்கு எதிராகப் போர் புரிவது எமது வெளியுறவுக் கொள்கை" என்ற பிரகடனத்தோடு ஆட்சிக்கு வந்தது அதுதான் நம்முடைய வெளியுறவுக் கொள்கையின் மையமாக அமைந்துள்ளது. ரேகனது நிர்வாகம் இந்தவித "நாகரிகத்துக்கு எதிரான காட்டுமிராண்டிகள்" பரவுவதை தடுக்கும் பொருட்டு உலகம் முபவதும் பன்னாட்டு பயங்கரவாதக் குழுக்களின் வலைப்பின்னலை உருவாக்கியது. முன்னெப்போதும் நடந்திராத வகையில் இந்தக் குழுக்கள் பூகோளத்தின் அனைத்து பகுதிகளிலும் கட்டுக்கடங்காத கொடுஞ்சசெயல்களை அரங்கேற்றின.

ரேகனின் அமெரிக்கா நிகராகுவாவுக்கு எதிரான போரில் பல்லாயிரம் மக்களைக் கொன்று குவித்து, நாட்டை மீட்டெடுக்க முடியாத வகையில் நாசக்காடாக்கியதை நான் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். நிகராகுவா எதிர்வினை புரிந்தார்கள். அவர்களின் எதிர்வினை வாஷிங்டனில் வெடிகுண்டு வைப்பதாக அமையவில்லை. அவர்கள் உலக நீதிமன்றத்திலும், பன்னாட்டு அவை பாதுகாப்புக் குழுவிலும், பன்னாட்டு அவை பொதுக்குழுவிலும், போய் முறையிட்டார்கள். நிகராகுவா அனைத்து நாட்டிடைச் சட்டங்களையும் பயன்படுத்தி நீதிக்காகப் போராடியது அடக்குமுறை ஆட்சி செய்கிற உலகில் அவர்களது முறையீடுகள் செல்லுபடி ஆகவில்லை. வேலைக்காகவில்லை.


"நமக்கு இதுபற்றி எல்லாம் எவ்வளவு தெரியும்?" நாம் இது பற்றி எவ்வளவு பேசுகிறோம்? நாம் இதுபற்றி பாடசாலைகளில் எவ்வளவு படிக்கிறோம்? (பத்திரிகைகளின்) முதல் பக்கங்களில் இதுபற்றி எவ்வளவு வெளியாகி உள்ளன" என்று கேட்பதன் மூலம் நாம் நம்முடைய கலாச்சாரத்தினுள்ளும், சமூகத்தினுள்ளும் புத்தொளி பாய்ச்ச முடியும்.

பயங்கரவாதப் படையிடம், நிராகுவாவின் தேசிய இராணுவத்தை எதிர்க்காமல், "மென்மையான இலகுவான" நிராயுதபாணி மக்களை குறிவைத்து தாக்கச் சொல்லி முதன்முறையாக, உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. நிகராகுவாவின் வான்வெளி முழுவதும் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருந்ததால் நிகராகுவாவின் தேசிய இராணுவத்தின் போக்கை குறிப்பெடுக்க முடிந்தது; எனவே கூலிக் கொலைப்படைக்கு அதிநவீன ஆயுதங்கள் வழங்கி நிகராகுவாவின் பாதுகாப்பு இல்லாத விவசாயக் கூட்டுப் பண்ணைகள் மீதும், சுகாதார நிலையங்கள் மீதும் பயங்கரவாத தாக்குதல்கள் நடத்த அமெரிக்கா துணை நின்றது.

அதற்கான எதிர்வினை என்னவாக இருந்தது? கடைசியில் நிகராகுவா வல்லரசின் வன்கொடுமைக்கு தலைகுனிய நேரிட்டது. உடனே வெளிப்படையாகவும் பூரிப்போடும் பயன்படுத்தப்பட்ட "முறைகளை"ப் போற்றிப் புகழ்ந்து வெற்றியைக் கொண்டாடினார்கள்.

நாம் இப்படிப்பட்ட கலாச்சாரத்தினுள்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அது உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளது. ஓர் உண்மை என்னவென்றால் பயங்கரவாதம் மட்டுமே செல்லுபடியாகிறது. அது தோற்பது இல்லை. வன்முறை பொதுவாகவே செயலாற்றுகிறது. அதுதான் உலக வரலாறு. இரண்டாவதாக ஒரு பொதுவான மையமான தவறு என்னவென்றால், பலவீனமானவர்களின் ஆயுதம் பயங்கரவாதம் என்று கருதுவது மற்ற வன்முறை வழிகளைப் போலவே பயங்கரவாதமும் பலம் வாய்ந்தவர்களின் ஆயுதம் என்பதுதான் உண்மை.

பயங்கரவாதம் பலவீனமானவர்களின் ஆயுதம் எனக் கருதப்படக் காரணம் பலம் வாய்ந்தவர்கள் கொள்கை பரப்புச் சாதனங்கள் எல்லாவற்றையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள். எனவே அவர்களது பயங்கரம், பயங்கரம் என எண்ணப்படுவதுமில்லை. இப்போது அது உலக பொதுவழக்காகி விட்டது. பயங்கரவாதம் என்பது பலவீனமானவர்களின் ஆயுதம் அல்ல. அது "நாம்" யாராக இருந்தாலும் "நமக்கு" எதிராகப் பயன்படுத்தப்படுகிற ஆயுதம். நீங்கள் யாராவது இதற்கு ஒரு வரலாற்று விதிவிலக்கு கண்டுபிடிக்க முடியுமென்றால், நான் அதை அறிய ஆவலாக உள்ளேன். இது உலகத்தின் வேறு பகுதிகளிலும நடக்கிறது. உதாரணத்துக்கு ஆப்பிரிக்கா ரேகன் காலத்தில் மட்டும், அமெரிக்கா / இங்கிலாந்து நாடுகளின் மறைமுக உதவியுடன் தென் ஆப்பிரிக்கா பக்கத்து நாடுகளின் மேல் நடத்திய தாக்குதல்களில் பதினைந்து லட்சம் மக்களுக்கு மேல் பலியாகி இருக்கிறார்கள். 60 பில்லியன் டாலர்கள் சொத்துமதிப்பு நாசமாகி இருக்கிறது. நாம் உலகைச் சுற்றி வலம்வந்தால் இன்னும் பல உதாரணங்களைச் சுட்டிக் காட்ட முடியும்.

பயங்கரவாதம் என்றால் என்ன?

அதற்கு அதிகாரபீடத்தின் சொற்பொருள் விளக்கம் உண்டு. "அலுவலக வரையறை வன்முறையைத் தருணம் பார்த்து பயன்படுத்துவதால் உருவாக்கப்படும் பீதி; அல்லது வன்முறையை ஏவுவதாய் பயமூட்டியும் பலவந்தமாய் கீழ்ப்படியச் செய்தும் அரசியல் அல்லது சமயம் சார்ந்த குறிக்கோள்களை வெற்றியடையச் செய்தல்" என்று அமெரிக்க ராணுவக் கையேடு வரையறுக்கிறது. அதுதான் பயங்கரவாதம். அது ஒரு சரியான வரையறைகூட, பிரச்சினை என்னவென்றால் அதை ஒப்புக் கொள்ளமுடியாது. அதை நீங்கள் ஒப்புக் கொண்டால் தவறான பின்விளைவுகளுக்கு காரணமாகிவிடும்.

நீங்கள் "தீவிரம் குன்றிய போர்தொடுப்பு" (டுடிற iவேநசளவைல றயசகயசந) என்ற அமெரிக்காவின் அதிகாரபூர்வ திட்டத்தின் வரையறையைப் பார்ப்பீர்களானால், நான் மேலே சொன்ன வரையறையோடு அது ஒத்துப் போவதைக் காணலாம். உண்மையில் "தீவிரம் குன்றிய போர்தொடுப்பு" என்பதே பயங்கரவாதத்தின் மறுபெயர்தான். அதனால்தான் எனக்குத் தெரிந்தவரை எல்லா நாடுகளும், தாம் மேற்கொள்பவை எவ்வளவு கொடூரமான நடவடிக்கையாக இருந்தாலும் அவற்றை பயங்கரவாத எதிர் நடவடிக்கை என்றே சொல்லிக் கொள்கின்றன. (ஊடிரவேநச வநசசடிசளைஅ ) நாம் தீவிரம் குன்றிய போர் தொடுத்தல் அல்லது எதிரிடை கிளர்ச்சி (ஊடிரவேநச ஐn ளுரசபநசல) என்கிறோம்.

வேறுசில பிரச்சனைகளும் உள்ளன. இவற்றில் சில 1987 டிசம்பரில் பயங்கரவாதத்துக்கு எதிரான முதல் போர் உச்சத்தில் இருந்தபோது மேலெழுந்தன. பன்னாட்டு அவையின் பொதுக்குழு பயங்கரவாதத்துக்கு எதிராக அனைத்து நாடுகளும் முடிகின்ற அனைத்து வழிகளிலும் போராட வேண்டும் என அறைகூவல் விடுத்து உறுதியான தீர்மானத்தை நிறைவேற்றியது. ஒரேஒரு நாடு ஹேராண்டுராஸ் மட்டும் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் வெளிநடப்பு செய்தது. வழக்கம் போல் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்த இரண்டே நாடுகள் - அமெரிக்காவும் இஸ்ரேலும்.

கடந்த 35 வருடங்களாக இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள பிரதேசங்களை சற்றே நினைவு கூறுங்கள். 30 வருடங்களுக்கு மேலாக அமெரிக்காவின் தயவோடு எல்லா சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கும் முட்டுக்கட்டை போடப்படுகிறது. இப்படிப்பட்ட ஆக்கிரமிப்புகளை ஆதரிப்போமானால் ராணுவ ஆக்கிரமிப்புக்கு எதிராகப் போராட யாரையும் நாம் அனுமதிக்க முடியாதுதான்.

இதுபற்றி எந்த பத்திரிகைச் செய்தியும் வெளியிடப்படவில்லை. பயங்கரவாதம் பற்றிய வரலாற்றுக் குறிப்பிலும் இது குறிப்பிடப்படவில்லை. வரையறைகளையும், அறிவுத்திறனையும் கவனத்துடன் அணுகினால்தான் நீங்கள் சரியான முடிவுகளுக்கு வர இயலும் இல்லையென்றால், உங்களுடைய அறிவுத்திறனோ, மதிப்பிற்குரிய பத்திரிகையாளர் தொழிலோ இழிவுக்குள்ளாகிவிடும்.

இவை எல்லாம் பயங்கரவாதத்துக்கு எதிராக ஒன்றுபட்ட ஒப்பந்தம் ஏற்படத் தடைகளாக உள்ளன. நாம் ஒருவேளை கருத்தரங்குகள் அல்லது வேறு ஏதாவது நடத்தி தவறாக அல்ல, சரியான விடைகளைக் கண்டடைகிற வகையில் பயங்கரவாதத்தை வரையறை செய்வதற்கு ஒரு வழி கண்டுபிடிக்க முயற்சி செய்யலாம். அது அவ்வளவு எளிது அல்ல.