1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Senthil Velan
Last Updated : திங்கள், 25 மார்ச் 2024 (14:40 IST)

கோவில் தேரோட்டம் கோலாகலம்..! திரளான பக்தர்கள் பங்கேற்பு..!!.

Therotam
சீர்காழி அருகே புகழ்பெற்ற திருநகரி ஸ்ரீ கல்யாண ரெங்கநாதர் பெருமாள் பங்குனி பெருவிழா கோவில் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.
 
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த திருநகரி கிராமத்தில் 108 திவ்யதேசத்தில் ஒன்றான ஸ்ரீ அமிர்தவள்ளி தாயார் சமேத கல்யாணரெங்கநாத பெருமாள் கோவில் அமைந்துள்ளது.
 
ஆழ்வார்களில் திருமங்கை ஆழ்வாரின் அவதார தலமான இக்கோயிலின் பங்குனி பெருவிழா கடந்த 17ம் தேதி  கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருதேரோட்டம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. 
 
தேரோட்டத்தை முன்னிட்டு கோயிலில் இருந்து ஸ்ரீ அமிர்தவள்ளி தாயார் சமேத கல்யாணரெங்கநாதர் ஒரு தேரிலும், ஸ்ரீ குமுதவள்ளி நாச்சியார் சமேத திருமங்கை ஆழ்வார் மற்றொறு தேரிலும் எழுந்தருளினர். அவர்களுக்கு வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு மகா தீபாராதனை நடைபெற்றது.

அதனை தொடர்ந்து முதலில் கல்யாணரெங்ஙநாத பெருமாள் தேரையும், அதனை தொடர்ந்து திருமங்கை ஆழ்வாரின் தேரையும் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். பக்தர்களின் ரெங்கநாதா, திருமங்கை மன்னா என்ற கோஷம் முழங்க தேர் நான்கு வீதிகளையும் வலம் வந்து நிலையை அடைந்தது.