வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. கட்டுரைகள்
Written By sivalingam

பச்சிளம் குழந்தையைக் கையாள்வது எப்படி? புது அம்மாக்களுக்கு சில ஐடியாக்கள்

பெண்களுக்கு தாய்மை என்பது இறைவன் கொடுத்த வரம். ஒரு பெண் தாய்மை அடைந்தவுடன் அடையும் மகிழ்ச்சியை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. கருவில் பத்துமாதம் சுமந்து பெற்ற அந்த குழந்தையை முதல் இரண்டு வருடங்களுக்கு கண்ணும் கருத்துமாக ஒரு தாய் கவனித்து கொள்வது மிக முக்கியம்.


 

 
 
முன்பெல்லாம் வீட்டில் பெரியவர்கள் இருந்தார்கள். குழந்தை பெற்ற புது அம்மாக்களுக்கு அவர்கள் அறிவுரை கூறி வந்தார்கள். ஆனால் தற்போது தனிக்குடித்தனம் செய்யும் பெரும்பாலான இளம் அம்மாக்களுக்கு குழந்தைய எப்படி கையாள்வது என்று தெரிந்திருக்கவில்லை. அவர்களுக்காக இதோ ஒருசில ஐடியாக்கள்:
 
1. குழந்தைகளுக்கு தாய்ப்பால் என்பது முதல் ஆறு மாதங்களுக்கு மிகவும் முக்கியம். இன்னும் சொல்லப்ப்போனால் முதல் ஆறு மாதங்கள் வரை, தாய்ப்பால் தவிர, தண்ணீர் உட்பட எதுவும் குழந்தைக்குத் தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் குழந்தையின் பசி அறிந்து பால் கொடுக்க வேண்டும். குழந்தை அழுகிறதே என்பதற்காக அழுகையை நிறுத்த ஓயாமல் பால் கொடுக்க கூடாது.
 
2. குழந்தைகள் எப்போது சிறுநீர், மலம் கழிக்கும் என்பதை தெரிந்து வைத்து கொள்ள வேண்டும். பொதுவாக பிறந்த பச்சைக் குழந்தைகள்  ஒரு மணிநேரத்துக்கு ஒருமுறைகூட சிறுநீரும், குறைந்தபட்சம், ஒரு நாளில் ஐந்து முறையாவது மலம் கழிக்கவும் செய்யும்.
 
3. குழந்தை பிறந்த ஒருசில மாதங்களுக்கு இரவில் விழித்திருக்கும், பகல் முழுவதும் தூங்கும். ஏனெனில் தாயின் கருவில் இருக்கும்போது அம்மா, பகல் முழுவதும் விழித்திருந்து வேலை செய்வது குழந்தைக்கு தாலாட்டு போன்று இருப்பதால் தூங்கிவிடும். அதே நேரம் இரவில் அம்மா தூங்கும்போது, தாலாட்டு நின்றுவிட்டதாக எண்ணி விழித்திருக்கும். இதே பழக்கம்தான் பிறந்தபின்னரும் குழந்தைகளுக்கு சில மாதங்கள் இருக்கும். அதுவரை அம்மா, இரவு தூக்கத்தை கொஞ்சம் தியாகம் செய்து குழந்தைகளை பார்த்து கொள்ள வேண்டும்
 
4. தாய்ப்பால் கொடுக்கும் வரை அம்மா என்னென்ன சாப்பிட வேண்டும். பால் அதிகம் சுரக்க வேண்டும் என்பதற்காக அம்மா ஸ்பெஷலாக எதையும் சாப்பிட வேண்டும் என்று தேவையில்லை. கொஞ்சம் அதிகமாக திரவ உணவை எடுத்து கொண்டாலே போதுமானது. பால் அதிகமாக சுரக்க, அம்மா தனது மனதை சந்தோஷமாக வைத்து கொள்வதோடு, குழந்தைகளிடம் அட்டாச்மெண்ட்டாக இருந்தால் போதும். அதாவது குழந்தையைக் கொஞ்சுவது, முத்தமிடுவது, நெஞ்சோடு அணைத்துக் கதகதப்பு கொடுப்பது ஆகியவையே பால் அதிகமாக சுரக்க காரணமாகிவிடுகிறது.
 
5. கூடுமானவரை குழந்தையை பார்க்க வரும் சொந்தங்கள், நட்பு வட்டாரங்களிடம் குழந்தையை கையில் கொடுக்காமல் இருப்பது நல்லது. அப்படி கொடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால் அவர்களுக்கு ஹேண்ட் சானிட்டைஸர் கொடுத்துப் பயன்படுத்தச் சொல்லலாம்