டொகோமோவுக்கு டாடா சன்ஸ் ரூ.7,950 கோடி இழப்பீடு வழங்க உத்தரவு
ஜப்பான் நிறுவனமான டொகோமோவிற்கு டாடா சன்ஸ் நிறுவனம் ரூ.7,950 கோடி இழப்பீடு வழங்க சர்வதேச தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவை சேர்ந்த டாடா நிறுவனமும், ஜப்பானை சேர்ந்த டொகோமோ நிறுவனமும் கூட்டு சேர்ந்து டாடா டொகோமோ என்னும் தொலைத்தொடர்பு நிறுவனத்தை 2008-ம் ஆண்டு இந்தியாவில் தொடங்கினர். கடந்த 2014-ம் ஆண்டு இக்கூட்டணியில் இருந்து வெளியேற டொகோமோ முடிவெடுத்தது.
மேலும் ஒப்பந்தத்தின்படி டாடா டொகோமோ நிறுவனத்தில் உள்ள டொகோமோ பங்குகளை விற்பதற்கு டாடா ஏற்பாடு செய்திருக்க வேண்டும். ஆனால் டாடா அதனை செய்யவில்லை. இதனால் கடந்த ஆண்டு லண்டனில் உள்ள சர்வதேச தீர்ப்பாயத்தில் டாடாவுக்கு எதிராக டொகோமோ நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.
டொகோமோ நிறுவனத்தின் பங்கு 26.5%. இதனை ரூ.13,070 கோடிக்கு வாங்கியது. இப்போது இதில் 50% தொகை இழப்பீடாக வழங்க சர்வதேச தீர்ப்பாயம் உத்தரவிட்டிருக்கிறது. டொகோமோ நிறுவனத்தின் பங்குகளை வாங்கிக்கொள்ள டாடா சன்ஸ் முன்வந்தது. இதற்காக ரிசர்வ் வங்கியின் அனுமதி கோரியது. ஆனால் ரிசர்வ் வங்கியின் அனுமதி கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.