வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடும் நடப்பும்
Written By
Last Updated : வியாழன், 14 ஜூன் 2018 (14:04 IST)

தந்தையை கவுரவிக்க கொண்டாடப்படும் தந்தையர் தினம்

தந்தைக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஆண்டுதோறும் ஜூன் மூன்றாவது ஞாயிற்று கிழமையில் உலக தந்தையர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இத்தினம்  மேலைநாட்டிலிருந்து வந்திருந்தாலும் இந்தியாவில் பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது.

தந்தையர் தினத்தில் அனைவரும் தந்தைக்கு நேரிலோ அல்லது  அலைபேசியிலோ வாழ்த்துக்களை தெரிவிக்கலாம். வேறு பல நாடுகளில், பிற நாட்களில் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் இந்த ஆண்டு ஜூன்  17-ஆம் தேதி தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது.
 
இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் அன்னையர் தினத்தை முழுமைப்படுத்த தந்தை ஸ்தானம் மற்றும் தந்தையைக் கொண்டாடுவதற்காக தந்தையர் தினம் என்ற கொண்டாட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. மேலும் தந்தையர் மற்றும் முன்னோர்களின் நினைவுவிழாவாகவும் இந்த நாளில் கொண்டாடப்பட்டு  கெளரவிக்கப்படுகிறது. 
 
தாயின் அன்புக்கு நிகரானது தந்தையின் பாசம். குழந்தையை கருவில் சுமந்து பெற்றெடுப்பது தாய் என்றால், நாள் எல்லாம் நெஞ்சில் சுமப்பவர் தந்தை.  குழந்தையின் ஆரோக்கியம் மீது தாய் கவனம் செலுத்துவது போல, அதன் முன்னேற்றத்துக்காக ஆயுள் முழுவதும் உழைப்பவர் தந்தை. ‘அன்னையிடம் அன்பை  வாங்கலாம், தந்தையிடம் அறிவை வாங்கலாம்’ என்ற பாடல்வரிகள் தாய், தந்தையரின் முக்கியத்துவத்தை விளக்குகின்றன.
 
ஒளவையார் சொல்லாத விஷயம் ஒன்றுமே இல்லை. அவர் ஆத்திசுவடியிலே அத்தனையும் ஒரு சில வார்த்தைகளிலே சொல்கிறார். அதில் தாய் தந்தையை  பற்றி...
 
"அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
தந்தை தாய்ப்பேண் 
தாயின் சிறந்தது ஒரு கோயிலும் இல்லை. 
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை".
 
ஒரு குடும்பத்தில், குழந்தைகளின் ஆரோக்கியத்தை பேணும் பொறுப்பு எப்படி தாய்க்கு இருக்கிறதோ, அதேபோல் அந்த குழந்தைகளின் முன்னேற்றத்தில் தந்தையின் பங்களிப்பு முக்கியமாக இருக்கிறது.
 
தந்தையர் தினம்’ என்பது 1910-ம் ஆண்டில் இருந்து தான் கொண்டாடப்படுகிறது. அதற்கு காரணமாக விளங்கியவர் அமெரிக்காவை சேர்ந்த சொனாரா லூயிஸ் ஸ்மார்ட் டோட் என்ற பெண் ஆவார். அவரது தாயாரின் மறைவுக்கு பிறகு, அந்த குடும்பத்தில் இருந்த 6 பிள்ளைகளையும் தந்தை வில்லியம்ஸ் தான் கடும்  சிரமத்திற்கு மத்தியில் வளர்த்தார். தாய்க்கு தாயாகவும், தந்தைக்கு தந்தையாகவும் இருந்து கடமையை நிறைவேற்றிய தனது தந்தையை கவுரவிக்க வேண்டும்  என்ற எண்ணம் அவருக்கு தோன்றியது.
 
அதன் அடிப்படையில், அன்னையர் தினத்தைப்போல் தந்தையர் தினத்தையும் கொண்டாட வேண்டும் என்று அவர் பிரசாரம் செய்தார். அவரது கோரிக்கையை, அப்போதைய ஸ்போக்கேன் நகர கவர்னர் அங்கீகரித்தார். அதன்பின்னர் தான், தந்தையர் தினமும் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.
 
இன்றைய பரபரப்பான உலகில், குடும்பத்தின் வளர்ச்சிக்காக உழைக்க ஓடிக்கொண்டிருக்கும் தந்தைமார்களில் எத்தனையோ பேர், குடும்பத்தை பிரிந்து வெளிநாடுகளில் உழைத்து கொண்டிருக்கின்றனர். உலகளவில் தந்தையர் தினம் பல்வேறு தேதிகளில் கொண்டாப்படுகிறது. மேலும் இந்த நாளில் தந்தையருக்கு  பரிசுகளைக் கொடுப்பது, சிறந்த இரவு விருந்து அளிப்பது மற்றும் குடும்ப உறவுகள் செயல்பாடுகளில் ஈடுபடுவது போன்றவை மேற்கொள்ளப்படும்.