1. விளையாட்டு
  2. »
  3. கிரிக்கெட்
  4. »
  5. செய்திகள்
Written By Muthukumar
Last Updated : செவ்வாய், 8 ஏப்ரல் 2014 (12:08 IST)

தன் மீதான விமர்சனங்கள் தவறு என்று யுவி நிரூபிப்பார் - சச்சின் டெண்டுல்கர்!

20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இறுதியில் 21 பந்துகளில் 11 ரன்கள் எடுத்து விராட் கோலிக்கும் ஸ்ட்ரைக் கொடுக்காமல் படுத்தி எடுத்து இந்திய தோல்விக்குக் காரணமான யுவ்ராஜ் சிங்கிற்கு சச்சின் டெண்டுல்கர் ஆறுதல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சச்சின் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
 
யுவி... ஒரு நாள் நீங்கள் சோபிக்காமல் போய் இருக்கலாம். அதற்காக கடந்த சில ஆண்டுகளாக நீங்கள் அணிக்கு அளித்த மிகப்பெரிய பங்களிப்புகள், பல மறக்க முடியாத இனிமையான நினைவுகளை அழித்து விட முடியாது. இன்று உங்களது ஆட்டத்தில் தொய்வு ஏற்பட்டிருக்கலாம். இந்த தொய்வு நிரந்தரமானது அல்ல.
2015–ம் ஆண்டு உலக கோப்பையை இந்தியா தக்க வைத்துக் கொள்வதற்கான முயற்சியில் நீங்கள் இருக்க வேண்டும் என்று நான் மட்டுல்ல, உலகில் உள்ள இந்திய ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்க்கிறார்கள். நேற்று முன்தினம் மாலை உங்களுக்கு கடுமையான நாள். உங்களை எல்லோரும் விமர்சித்து இருக்கலாம். அதற்காக உங்களுடைய கிரிக்கெட் அத்தியாயம் முடிந்து விட்டதாக அர்த்தமல்ல.
 
யுவராஜ்சிங்கின் முழுமையான உத்வேகத்தை கண்டு மெச்சுபவர்களில் நானும் ஒருவன். அவர் பல்வேறு சவால்களை களத்திலும், வெளியிலும் கடந்து வந்துள்ளார். அவரது மனஉறுதியும், போராட்ட குணமும் அவரை இன்னும் வலிமையான மனிதராக வெளிக்கொண்டு வரும். தன் மீதான விமர்சனங்கள் தவறு என்பதை மீண்டும் நிரூபித்து காட்டுவார்.
 
இவ்வாறு கூறியுள்ளார் சச்சின் டெண்டுல்கர்.
 
சச்சின் டெண்டுல்கரின் 100வது சர்வதேச சதம் ஆசியக் கோப்பை கிரிக்கெட்டில் வங்கதேசத்திற்கு எதிராக தோல்வியைப் பெற்றுத் தந்ததோடு, இந்தியா வெளியேறியும் விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.