வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்
Written By Webdunia

கணவருடன் சேர்த்து வைப்பதாக ஏமாற்றி காரில் கடத்தி நடிகை கற்பழிப்பு

கணவருடன் சேர்த்து வைப்பதாக ஏமாற்றி காரில் கடத்தி துணை நடிகை கற்பழிக்கப்பட்டார். இது தொடர்பாக பல் மருத்துவர் கைது செய்யப்பட்டார். மேலும் 4 பேரை காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.
FILE

சென்னை மாதவரம் வி.ஆர்.டி. நகரை சேர்ந்தவர் பாபு. அவருடைய மகள் அபிராமி (வயது 23). துணை நடிகை. பல்வேறு படங்களில் குழுநடனத்தில் நடனம் ஆடி உள்ளார். அவர், கடந்த அக்டோபர் மாதம் தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா விழாவுக்கு நடனம் ஆடுவதற்காக வந்தார்.

தசரா விழாவில் நடனம் ஆடும் போது, உடன்குடி அருகே உள்ள தேரியூரை சேர்ந்த பல் மருத்துவர் முத்துலிங்கம் என்பவருடைய மகன் முத்துக்குமரனும் (22) நடனம் ஆடினார். அவர் வள்ளியூரில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 4-ம் ஆண்டு படித்து வருகிறார். அப்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.

இருவரும் ஒருவருக்கொருவர் செல்போன் எண்ணை பரிமாறிக்கொண்டனர். அதன்பிறகு அபிராமி சென்னைக்கு சென்று விட்டார். இருவரும் செல்போனில் அடிக்கடி பேசி வந்தனர். இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டு அபிராமியும், முத்துக்குமரனும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். முத்துக்குமரன் கடந்த டிசம்பர் மாதம் அபிராமியை சந்திப்பதற்காக சென்னை சென்றார்.

அப்போது அபிராமியின் உறவினர்கள், காதலர்களை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தினர். அதன்பிறகு முத்துக்குமரனும், அபிராமியும் அங்குள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்டு அங்கேயே குடும்பம் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையே தந்தை அழைத்ததால் சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு சென்ற முத்துக்குமரன் அதன்பிறகு சென்னை திரும்பவில்லை.

காதல் கணவரை காணாமல் அபிராமி மனம் வருந்தினார். கணவர் முத்துக்குமரனை தேடி நேற்று முன்தினம் அபிராமி நெல்லை வந்தார். அப்போது தன்னுடைய காதலனை செல்போனில் தொடர்பு கொண்டார். அவருடைய செல்போன் அணைத்து வைக்கப்பட்டு இருந்தது. அடுத்து அவருடைய தந்தை முத்துலிங்கத்தை செல்போனில் தொடர்பு கொண்டார். உடன்குடிக்கு எப்படி வருவது? என்று கேட்டார். அதற்கு, அவர் “நீ இங்கு வந்து விலாசத்தை தேடி அலைய வேண்டாம். நானே வந்து உன்னை அழைத்து செல்கிறேன். எங்கு நிற்கிறாய்?” என்று கேட்டார்.

அதற்கு அபிராமி “நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் நின்று கொண்டு இருக்கிறேன்” என்று கூறினார். உடனடியாக நான் அங்கு வருகிறேன் என்று முத்துலிங்கம் செல்போனை துண்டித்து இருக்கிறார்.

1 மணி நேரம் கழித்து முத்துலிங்கம் நெல்லை புதிய பேருந்து நிலையம் வந்தார். அவருடன் 5 பேர் வந்து இருந்தனர். பின்னர் அவர்கள், அபிராமியை, முத்துக்குமரனிடம் அழைத்துச்செல்வதாக கூறி காரில் அழைத்துச்சென்றனர். அபிராமியும், இதனை நம்பி காரில் ஏறினார். கார், உடன்குடி அருகே ஆள் இல்லாத ஒரு வீட்டு முன்பு நிறுத்தப்பட்டது. அங்கு முத்துக்குமரன் இருப்பதாக நினைத்து, அபிராமி வீட்டுக்குள் சென்றார். அவரை அங்கு அடைத்து வைத்து சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது.

அப்போது, “நீ என்னுடைய மகனை மறந்து விட்டு ஊருக்கு திரும்பி சென்று விடு” என முத்துலிங்கம் கூறினார். அதற்கு அபிராமி, நான் முத்துக்குமரனுடன் தான் சென்னை செல்வேன்” என்று பிடிவாதமாக கூறினார்.

அதன்பிறகு அந்த வீட்டை விட்டு முத்துலிங்கமும், அவருடைய உறவினர் ஒருவரும் வெளியேறினார்கள். காரில் வந்து 2 இளைஞர்கள் அபிராமியை பலவந்தமாக கற்பழித்ததாக கூறப்படுகிறது. பின்னர் அந்த இளைஞர்கள் அபிராமியை ஒரு காரில் ஏற்றி கொண்டு பாளையங்கோட்டை ஆரோக்கியநாதபுரம் காட்டு பகுதியில் இறக்கி விட்டு சென்றனர். அப்போது அந்த இளைஞர்கள் இதை வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவதாகவும் அபிராமியை மிரட்டி விட்டு சென்றனர்.

வழி தெரியாமல் நின்று கொண்டு இருந்த அபிராமியை அந்த பகுதி கிராம மக்கள் பாளையங்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதன்பேரில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் மேற்கண்ட தகவல்களை அபிராமி காவல்துறையினரிடம் தெரிவித்தார். இந்த புகார் தொடர்பாக முத்துக்குமரன், அவருடைய தந்தை முத்துலிங்கம் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக மகளிர் காவல்துறையினர் தேரியூருக்கு சென்றனர். அங்கு பல் மருத்துவர் முத்துலிங்கத்தை கைது செய்தனர். மேலும் 4 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இதற்கிடையில் அபிராமிக்கு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் விசாரணை நடந்து வருகிறது.