வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Caston
Last Modified: செவ்வாய், 9 பிப்ரவரி 2016 (16:50 IST)

உலக கோப்பை இறுதி போட்டியில் இந்தியா: இலங்கையை துவம்சம் செய்த 19 வயது இளம் சிங்கங்கள்!

வங்கதேசத்தில் நடைபெற்றுவரும் 19 வயதுக்குட்பட்டோருக்கான ஜூனியர் உலக கோப்பை அரை இறுதி போட்டி இன்று டாக்காவில் நடைபெற்றது. இந்த போட்டியில் இலங்கையை வீழ்த்தி இந்தியா இறுதி போட்டிக்கு முன்னேறியது.


 
 
இந்த தொடரில் தோல்வியே சந்திக்காமல் கம்பீரமாக அரை இறுதிக்குள் நுழைந்த இந்திய அணி, அரை இறுதி போட்டியில் இலங்கையை துவம்சம் செய்தது.
 
டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீச்சை தேர்ந்தெடுத்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய வீரர்கள் 9 விக்கெட் இழப்புக்கு 267 ரன்கள் குவித்தது. இந்திய தரப்பில் அன்மோல்ப்ரீட் சிங் 72 ரன்னும், சர்ஃப்ராஸ் கான் 59 ரன் குவித்து உதவினர். இலங்கை தரப்பில், அசித பெர்னாண்டோ 4 விக்கெட் வீழ்த்தினார்.
 
பின்னர் 268 ரன்கள் அடித்தால் இறுதி போட்டிக்கு நுழையலாம் என்ற இலக்குடன் களம் இறங்கிய இலங்கை அணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஆரம்பம் முதலே இந்திய பந்து வீச்சாளர்கள் இலங்கையை கதிகலங்க வைத்தனர். எந்த பேட்ஸ்மேனையும் நிலைத்து நின்று ஆடவிடவில்லை. சீரான இடைவெளியில் இலங்கை விக்கெட்டுகளை இந்திய வீரர்கள் வீழ்த்தினர்.
 
இறுதியாக 42.4 ஓவரில் இலங்கை அணி 170 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இந்தியாவிடம் தோல்வியை தழுவியது. இதன் மூலம் 97 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி இறுதி போட்டிக்கு முன்னேறியது.
 
இந்த போட்டியில் இலங்கை தரப்பில் அதிகபட்சமாக கமிண்டு மெண்டிஸ் 39 ரன் குவித்தார். இந்திய தரப்பில் மயங் டகர் 3 விக்கெட்டும், அவேஷ் கான் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இந்த வெற்றி மூலம் ஐந்தாவது முறையாக இந்திய ஜூனியர் அணி உலக கோப்பை இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது.