1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வெள்ளி, 4 ஆகஸ்ட் 2023 (14:28 IST)

இளம் வீரர்கள் தவறு செய்வது இயல்புதான்… வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தோல்விக்குப் பிறகு பேசிய பாண்ட்யா!

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையில் நடந்த முதல் டி 20 போட்டியில் முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட்களை இழந்து 149 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அந்த அணியின் கேப்டன் ரோவ்மன் பவல் அதிகபட்சமாக 48 ரன்கள் சேர்த்தார். இந்தியா தரப்பில் அதிகபட்சமாக அர்ஷ்திப் சிங் மற்றும் சஹால் ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.

அதன்பின்னர் எளிதான இலக்கை துரத்திய இந்திய அணி தொடக்க வீரர்களை அடுத்தடுத்து இழந்தது. அதன் பின்னரும் சீரான இடைவெளியில் விக்கெட்கள் விழுந்த வண்ணம் இருந்தன. இதனால் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்களை இழந்து 145 ரன்கள் மட்டுமே சேர்த்து 4 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

தோல்விக்குப் பின்னர் பேசிய இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா “நாங்கள் பேட்டிங்கில் சில தவறுகளை செய்ததால் எங்களால் வெற்றியைப் பெறமுடியவில்லை. இளம் வீரர்கள் தவறு செய்வது இயல்புதான். இதிலிருந்து பாடம் கற்றுக் கொள்வோம். இன்னும் நான்கு போட்டிகள் உள்ளன. இளம் வீரரான திலக் வர்மா சிறப்பாக பேட்டிங் செய்தார். அவர் பேட்டிங்கில் பயம் இல்லை” எனக் கூறியுள்ளார்.