1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : புதன், 20 மார்ச் 2024 (08:01 IST)

ஃபிட் இல்லை என அறிவித்த என் சி ஏ… இதயம் நொறுங்கிய சூர்யகுமார் யாதவ்!

சமீபத்தில் நடந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டி 20 போட்டியில் பீல்டிங் செய்த போது சூர்யகுமார் யாதவ்வுக்கு கனுக்காலில் காயம் ஏற்பட்டது. அதன் காரணமாக அவருக்கு சமீபத்தில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் ஐபிஎல் தொடரில் விளையாடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஐபிஎல் தொடர் முடிந்ததும் டி 20 உலகக் கோப்பை தொடர் நடக்கவுள்ள நிலையில் அதற்கு அவர் முக்கியமான வீரராக இருப்பார் என்பதால் அவரை ஐபிஎல் தொடருக்காக அவசரப்படுத்த வேண்டாம் என பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் ஐபிஎல் தொடரில் அவர் முதல் சில போட்டிகளை விளையாட முடியாத சூழல் உருவாகியுள்ளது. இது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.

இந்நிலையில் தேசிய கிரிக்கெட் அகாடெமி அவருக்கு தடையில்லா சான்றிதழ் வழங்க மறுத்துள்ளது. அவரின் அடுத்த சோதனை மார்ச் 21 ஆம் தேதி நடக்கும் என சொல்லப்படுகிறது. இதனால் இதயம் நொறுங்கிய எமோஜியை தனது சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் சூர்யகுமார்.