வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Ilavarasan
Last Modified: வியாழன், 24 ஜூலை 2014 (15:57 IST)

19 வயதில் பெர்த்தில் அடித்த சதமே எனக்கு தன்னம்பிக்கையை தந்தது - சச்சின்

நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் மும்பையில் உள்ள பள்ளி ஒன்றில் நடந்த விழாவில் கலந்து கொண்டு மாணவர்களுடன் உரையாடினார்.
 
அப்போது தனது 19 ஆவது வயதில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக பெர்த்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் தான் அடித்த செஞ்சுரியே தனது கிரிக்கெட் வாழ்க்கையின் பாதையை மாற்றியதாக அவர் தெரிவித்தார். அந்த ஆடுகளம் பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்ததால் பந்து பவுண்சர் ஆனதால் பேட்ஸ்மேன்கள் ரன் குவிப்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டது. ஆனால் அந்த நிலையிலும் கூட நிதானமாக விளையாடி தன்னால் 114 ரன்கள் எடுக்கமுடிந்தது தனக்கு மிகுந்த தன்னம்பிக்கையை தந்ததாக சச்சின் சிறுவர்களிடம் கூறினார்.
 
பெர்த் மைதானத்தில் சதம் அடித்துவிட்டால் உலகின் எந்த மைதானத்தில் நம்மால் சிறப்பாக விளையாட முடியும் என்று எண்ணிய நான் மிகுந்த கவனத்துடன் ஆடி சதம் அடித்தேன் என சச்சின் மேலும் கூறினார். தனது தந்தைக்கு கிரிக்கெட் விளையாட்டின் மீது ஈடுபாடு இல்லாதபோதும் தன்னை அவர் பெரிதும் ஊக்குவித்ததாக கூறிய அவர் இவ்விஷயத்தில் தனது சகோதரர் தனக்கு மிகவும் உதவிகரமாக இருந்ததாக கூறினார்.
 
என்னைப் போலவே எனது மகன் அர்ஜுன் கிரிக்கெட் விளையாட்டில் விருப்பம் கொண்டுள்ளான். அவனிடம் எதை செய்தாலும் அதில் உறுதியான ஈடுபாடு கொள்ளவேண்டும் என்று அறிவுறுத்தியதாகவும், தானும் அவனது முயற்சிக்கு உறுதுணையாக இருப்பதாக கூறியுள்ளதாகவும் தெரிவித்தார். அது போல் எனது மகள் சாரா தனது தாயை போல் மருத்துவராக விருப்பம் தெரிவித்துள்ளார். தனக்கு விருப்பமானதை தேர்வு செய்ய அவருக்கும் முழு சுதந்திரம் அளித்துள்ளதாக சச்சின் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.