வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 24 செப்டம்பர் 2020 (10:49 IST)

அம்பத்தி ராயுடு இல்லாத சிஎஸ்கே! டெல்லியை வெல்ல முடியுமா?

நாளை நடக்க இருக்கும் சிஎஸ்கே – டெல்லி கேப்பிட்டல்ஸ் ஆட்டத்தில் அம்பத்தி ராயுடு விளையாட மாட்டார் என வெளியாகியுள்ள செய்தி சிஎஸ்கே ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமீரகத்தில் நடந்து வரும் ஐபிஎல் போட்டிகளில் நாளை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டெல்லி கேப்பிட்டல்ஸுடன் மோத இருக்கிறது. முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸை சிஎஸ்கே எதிர்கொண்டபோது அசாதாரணமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அம்பத்தி ராயுடு 72 ரன்களை எடுத்தார். முதல் ஆட்டத்தின் வெற்றிக்கு அம்பத்தி ராயுடு முக்கிய காரணமாக கருதப்பட்டார்.

இந்நிலையில் காயம் காரணமாக ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் ராயுடு விளையாடவில்லை. சிஎஸ்கே 17 ரன்கள் வித்தியாசத்தில் அந்த ஆட்டத்தில் தோல்வியை தழுவியது. ராயுடு இருந்திருந்தால் அந்த ஆட்டத்தில் நிச்சயம் சிஎஸ்கே வென்றிருக்கும் என கூறிய ரசிகர்கள் நாளைய ஆட்டத்தில் ராயுடு கலந்து கொள்வார் என எதிர்பார்த்தார்கள்.

ஆனால் நாளைய ஆட்டத்தில் ராயுடு கலந்து கொள்ள வாய்ப்பில்லை என சிஎஸ்கே நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதேசமயம் அவருக்கு பெரிய காயங்கள் இல்லை என்றும் அடுத்தடுத்த ஆட்டங்களில் பங்கு பெறுவார் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் ராயுடு இல்லாத சிஎஸ்கே அணி டெல்லி கேப்பிட்டல்ஸை வீழ்த்துமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.