1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Ilavarasan
Last Modified: வியாழன், 19 ஜூன் 2014 (13:34 IST)

பஞ்சாப் அணியை விற்கமாட்டேன் - பிரீத்தி ஜிந்தா

பங்குதாரர் மீது புகார் கூறியதால் பஞ்சாப் அணியை விற்கமாட்டேன் என்று நடிகை பிரீத்தி ஜிந்தா கூறினார்.
 
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் விளையாடும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளர்களாக நடிகை பிரீத்தி ஜிந்தாவும் அவரது முன்னாள் காதலர் நெஸ் வாடியாவும் இருந்து வருகிறார்கள்.
 
காதலில் இருவருக்கும் பிரிவு ஏற்பட்டாலும், பஞ்சாப் அணியின் பங்குதாரர்களாக நீடித்து வந்தனர். இந்த நிலையில் ஐ.பி.எல். போட்டியின் போது மும்பை ஸ்டேடியத்தில் தன்னிடம் நெஸ் வாடியா தவறாக நடந்து கொண்டதாக பிரீத்தி ஜிந்தா மும்பை காவல்துறையில் புகார் செய்தார்.
 
காவல்துறையினர் நெஸ் வாடியா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் தன்னையும், தனது தந்தை நுஸ்லி வாடியாவையும், பிரீத்தி ஜிந்தா தாதாக்கள் மூலம் மிரட்டுவதாக நெஸ் வாடியா காவல்துறையில் புகார் செய்தார்.
 
இதற்கிடையே பங்குதாரர்களிடையே மோதல் காரணமாக ஐ.பி.எல். பஞ்சாப் அணியை பிரீத்தி ஜிந்தா விற்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது. இதை பிரீத்தி ஜிந்தா மறுத்துள்ளார். அவர் தனது டுவிட்டரில் ‘‘எனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி. பஞ்சாப் அணியின் எனது பங்குகளை விற்கப்போவதாக கூறுவது தவறு. பஞ்சாப் அணியை ஒரு போதும் விற்கமாட்டேன்’’ என்று கூறியுள்ளார்.