1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: ஞாயிறு, 2 ஆகஸ்ட் 2015 (20:51 IST)

பாகிஸ்தான் திரில் வெற்றி; டெஸ்ட், ஒருநாள், டி-20 மூன்றிலும் சரணடைந்தது இலங்கை

பாகிஸ்தான் - இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி-20 போட்டியில் பாகிஸ்தான் அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை தோற்கடித்தது.
 
பாகிஸ்தான் - இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை தோற்கடித்தது. இந்நிலையில், இரண்டாவது டி-20 போட்டி நேற்று கொழும்பு பிரமதேசா மைதானத்தில் நடைபெற்றது.
 

 
இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. இதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 7 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்தது.
 
இலங்கை அணியில் அதிகபட்சமாக கபுகேதெரா 25 பந்துகளில் [2 பவுண்டரிகள், 4 சிக்சர்கள்] 48 ரன்கள் குவித்தார். ஷெஹான் ஜயசூர்யா 32 பந்துகளில் [3 பவுண்டரிகள், 2 சிக்சர்கள்] 40 ரன்கள் குவித்தார். பாகிஸ்தான் தரப்பில் ஷோயப் மாலிக் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
 
அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் தொடக்க வீரர்களான அஹ்மத் ஷெஷாத் 7 ரன்களிலும், முஹ்தர் அஹ்மத் 4 ரன்களிலும், முஹமது ஹபீஸ் 11 ரன்களிலும், உமர் அக்மல் 4 ரன்களிலும், ஷோயப் மாலிக் 8 ரன்களிலும், அடுத்தடுத்து வெளியேறினர். இதனால், ஒருகட்டத்தில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 40 ரன்கள் என்ற நிலையில் இருந்தது.
 
தனிக்காட்டு சிங்கங்கள்:
 
பின்னர் களமிறங்கிய ஷாகித் அஃப்ரிடி இலங்கை அணியின் பந்துவீச்சை நேர்த்தியாக எதிர்கொண்டார். இதனால், அந்த அணி சரிவில் இருந்து மீண்டது. இதற்கிடையில் மொஹம்மது ரிஸ்வான் 17 ரன்களிள் வெளியேறினார். இதனையடுத்து ஷாகித் அஃப்ரிடியும் 22 பந்துகளில் [1 பவுண்டரிகள், 4 சிக்சர்கள்] 45 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
 

 
அப்போது பாகிஸ்தான் அணி 107 ரன்களுக்குள் 7 விக்கெட்டுகளை இழந்திருந்தது. இதனால், இலங்கை அணி வெற்றி பெறுவதற்கான அத்தனை அம்சங்களும் இருந்தன. அன்வர் அலி 9ஆவது வீரராக களமிறங்கி இலங்கை பந்துவீச்சை துவம்சம் செய்தார். அவருக்கு துணையாக இமத் வாசிமும் தனது பங்கை செலுத்தினார்.
 
எதிர்பாராத விதமாக அன்வர் அலி 17 பந்துகளில் [3 பவுண்டரிகள், 4 சிக்சர்கள்] 46 ரன்கள் எடுத்து வெளியேறினார். இருவரும் இணைந்து 8ஆவது விக்கெட்டுக்கு 58 ரன்கள் சேர்த்தது குறிப்பிடத்தக்கது. இறுதியாக பாகிஸ்தான் அணி 19.2 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்து திரில் வெற்றி பெற்றது. இலங்கை அணி தரப்பில் பெர்ணாண்டோ 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 
 
இதன் மூலம், இரண்டு போட்டிகள் கொண்ட டி-20 தொடரை 2-0 என்ற கணக்கில் பாகிஸ்தான் அணி கைப்பற்றியது. ஆட்ட நாயகன் விருது அன்வர் அலிக்கு வழங்கப்பட்டது. தொடர்நாயகன் விருது ஷோயப் மாலிக்-க்கு வழங்கப்பட்டது.
 
பாகிஸ்தானிடம் சரணடைந்த இலங்கை:
 
கடந்த ஜூன் மாதம் இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்த பாகிஸ்தான் அணி 3 டெஸ்ட் போட்டிகள், 5 ஒருநாள் போட்டிகள் இரண்டு டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
 
இதில் டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை 3-2 என்ற கணக்கிலும், டி-20 தொடரை 2-0 என்ற கணக்கில் பாகிஸ்தான் அணி கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.