வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Ilavarasan
Last Modified: வியாழன், 10 ஜூலை 2014 (15:13 IST)

வெளிநாட்டு மண்ணில் முதல் சதத்தை அடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது - முரளி விஜய்

வெளிநாட்டு மண்ணில் முதல் சதத்தை அடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது என்று இங்கிலாந்துக்கு எதிராக நேற்று நடந்த முதல் டெஸ்டின் முதல் நாளில் சதமடித்த இந்திய கிரிக்கெட் வீரர் முரளி விஜய் தெரிவித்துள்ளார்.
 
இந்தியா– இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் உள்ள டிரென்ட் பிரிடஜ் மைதானத்தில் நேற்று தொடங்கியது.
 
முதலில் விளையாடிய இந்திய அணி நேற்றைய முதல்நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 259 ரன் குவித்து வலுவான நிலையில் இருந்தது.
 
தொடக்க வீரரும், தமிழகத்தை சேர்ந்தவருமான முரளிவிஜய் அபாரமாக விளையாடி சதம் அடித்தார். அவர் 122 ரன்னும், கேப்டன் டோனி 50 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் உள்ளனர்.
 
புஜரா 38 ரன்னும், ரகானே 32 ரன்னும் எடுத்தனர். முன்னணி வீரரான வீராட்கோலி 1 ரன்னில் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தார்.
 
23 ஆவது டெஸ்டில் விளையாடும் முரளி விஜய்க்கு இது 4 ஆவது சதமாகும். வெளிநாட்டு மண்ணில் முதல் சதத்தை அடித்தார்.
 
2010 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முதல் சதத்தையும் (139 ரன், பெங்களூர்), 2013 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2 ஆவது, 3 ஆவது சதத்தையும், (167 ரன், ஐதராபாத்), (153 ரன், மொகாலி) அடித்தார்.
 
சதம் அடித்த முரளி விஜய் நிருபர்களிடம் கூறியதாவது:–
 
ஆடுகளம் பேட்டிங்குக்கு ஏற்ற வகையில் இருந்தது. இதை சரியாக பயன்படுத்திக்கொண்டு செஞ்சூரி அடித்தேன். வெளிநாட்டு மண்ணில் முதல் சதத்தை அடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இங்கிலாந்துக்கு எதிரான இந்த தொடர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இதில் விளையாடுவது மிகவும் சிறப்பானது என்று அவர் கூறியுள்ளார்.
 
சதம் அடித்ததன் மூலம் காம்பீருக்கு பதிலாக தன்னை அணியில் சேர்த்ததை நியாயப்படுத்தி உள்ளார்.