வெள்ளி, 29 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 8 அக்டோபர் 2018 (10:11 IST)

இரண்டாண்டுகளுக்குப் பிறகு ஹஃபீஸ் சதம் –பாகிஸ்தான் நிதானத் தொடக்கம்

துபாயில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதல் நாள் முடிவில் பாகிஸ்தான் மூன்று விக்கெட் இழப்புக்கு 255 ரன்கள் குவித்துள்ளது.

பாதுகாப்பு காரணங்களுக்காக பாகிஸ்தானில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படுவதில்லை. அதனால் பாகிஸ்தான் சம்மந்தப்பட்ட போட்டிகள் துபாயில் நடத்தப்பட்டு வருகின்றன. தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2 டெஸ்ட் மற்றும் 3 இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது.

நேற்று தொடங்கிய முதல் டெஸ்ட்டில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய இனாம் உல் ஹக் மற்றும் முகமது ஹஃபீஸ் ஜோடி நிதானமாக விளையாடி ரன்குவிப்பில் ஈடுபட்டது. இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 206 ரன்கள் சேர்த்தது.

சிறப்பாக விளையாடிய இனாம் உல் ஹக் லியான் பந்துவீச்சில் 76 ரன்களுக்கு அவுட் ஆனார். இரண்டாண்டுகளுக்குப் பிறகு சர்வதேச போட்டியில் விளையாடிய ஹஃபீஸ் 128 ரன்கள் சேர்த்து சிடில் பந்தில் தனது விக்கெட்டை இழந்தார். அதைத் தொடர்ந்து வந்த அஸார் அலி 18 ரன்களில் ஆட்டமிழந்தார்.

முதல் நாள் முடிவில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட் இழப்புக்கு 255 ரன்கள் சேர்த்துள்ளது. ஹேரிஸ் சோஹைல் 15 ரன்களோடும் முகமது அப்பாஸ் 1 ரன்னோடும் களத்தில் விளையாடி வருகின்றனர்.