வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: புதன், 18 நவம்பர் 2015 (18:20 IST)

மழையால் 2ஆவது டெஸ்ட் டிரா; டி வில்லியர்ஸின் 100ஆவது போட்டியில் ஏமாற்றம்

இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டி தொடர்மழையால் டிராவில் முடிவடைந்தது.
 

 
இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. மொஹாலியில் நடைபெற்ற தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 108 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
 
இரண்டாவது டெஸ்ட் போட்டி சனிக்கிழமை அன்று [14-11-15], பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி முதலில் பந்துவீச தீர்மானித்தார்.
 
அதன் படி முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி தனது முதல் இன்னிங்ஸில், 59 ஓவர்கள் முழுமையாக விளையாடிய தென் ஆப்பிரிக்கா 214 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
 
ஒருகட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி 45 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது. இந்நிலையில், டி வில்லியர்ஸ் களமிறங்கினார். டி வில்லியர்ஸுடன், டுமினி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. இந்த இணை 5ஆவது விக்கெட்டுக்கு 42 ரன்கள் சேர்த்தது.
 
100ஆவது டெஸ்டில் களமிறங்கிய டி வில்லியர்ஸ் 59 பந்துகளில் [8 பவுண்டரிகள்] அரைச்சதம் கடந்தார். ஒருவழியாக டி வில்லியர்ஸ் 85 ரன்களில் வெளியேறினார். இறுதியில் இந்தியா தரப்பில் அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
 
பின்னர் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி முதல்நாள் ஆட்ட முடிவில், விக்கெட் இழப்பின்றி 80 ரன்கள் குவித்துள்ளது. முரளி விஜய் 28 ரன்களுடனும், தவான் 45 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
 
இந்நிலையில் 2ஆவது, 3ஆவது மற்றும் 4ஆவது நாள் ஆட்டங்கள் தொடர் மழையால் கைவிடப்பட்டது. 5ஆவது நாளும் தொடர்ந்த மழையால் இரு அணிகளின் கேப்டன்களும் டிராவில் ஆட்டம் முடிவடைவதை ஒத்துக் கொண்டனர்.