1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Caston
Last Modified: திங்கள், 19 டிசம்பர் 2016 (17:07 IST)

சென்னை டெஸ்டில் வரலாற்று சாதனை படைத்தது இந்தியா: கருண் நாயர் முச்சதம்!

சென்னை டெஸ்டில் வரலாற்று சாதனை படைத்தது இந்தியா: கருண் நாயர் முச்சதம்!

இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் கருண் நாயர் முச்சதம் அடித்தது மட்டுமல்லாமல் இந்திய அணி வரலாற்று சாதனை ஒன்றை படைத்துள்ளது.


 
 
இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தாலும், 2ஆவது, 3ஆவது மற்றும் 4ஆவது டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது.
 
இந்நிலையில், 5ஆவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.
 
இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 477 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. அபாரமாக ஆடிய மொய்ன் அலி 146 ரன்கள் குவித்தார். இந்தியா தரப்பில் ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளையும், உமேஷ் யாதவ் மற்றும் இஷாந்த் சர்மா தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அஸ்வின் ஒரு விக்கெட் மட்டும் வீழ்த்தினார்.
 
பின்னர், முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியில் தொடக்க ஜோடிகளான கே.எல்.ராகுல்-பார்த்திவ் படேல் இணை 152 ரன்கள் குவித்தது. பார்த்திவ் படேல் 71 ரன்கள் குவித்தார். பின்னர் புஜாரா (16), விராட் கோலி (15) என அடுத்தடுத்து வெளியேறினர்.
 
இதற்கிடையில் அற்புதமாக ஆடிய கே.எல்.ராகுல் சதத்தினை பதிவு செய்தார். பின்னர் கே.எல்.ராகுல் உடன் கருண் நாயர் இணைந்தார். இந்த ஜோடி இங்கிலாந்தின் தாக்குதலை நேர்த்தியாக எதிர்கொண்டது. சீரான ஆட்டத்தை வெளிப்படுத்திய கே.எல்.ராகுல் துரதிர்ஷ்டவசமாக 199 ரன்களில் வெளியேறினார். மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய தனது முதல் இன்னிங்ஸில் 391 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது. கருண் நாயர் 71 ரன்களுடனும், முரளி விஜய் 17 ரன்களுடனும் இருந்தனர்.
 
இன்றைய நான்காம் ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியது. குறிப்பாக 71 ரன்களுடன் இன்றைய ஆட்டத்தை தொடங்கிய கருண் நாயர் தொடர்ந்து சதம், இரட்டை சதம் என முன்னேற இறுதியாக முச்சதமும் அடித்து அசத்தினார்.
 
அறிமுக டெஸ்ட் தொடரிலேயே முச்சதம் அடித்த ஒரே இந்திய வீரர் என்ற பெருமையையும், முச்சதம் அடித்த இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையையும் கருண் நாயர் பெற்றார். மேலும் டெஸ்ட் போட்டியில் ஒரு வீரரின் இரண்டாவது அதிகபட்ச ரன் இதுவாகும்.
 
இந்த போட்டியில் இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 759 ரன்களுக்கு 7 விக்கெட்டை இழந்து டிக்ளேர் செய்தது. இதன் மூலம் இந்தியா தனது அதிகபட்ச டெஸ்ட் ஸ்கோரை சென்னை டெஸ்ட் மூலம் பதிவு செய்து சாதனை படைத்துள்ளது.