வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Updated : வெள்ளி, 6 மார்ச் 2015 (21:03 IST)

வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றது இந்தியா

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.
உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழாவில், ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ள நடப்பு சாம்பியன் இந்திய அணி, முன்னாள் சாம்பியன் வெஸ்ட் இண்டீசுடன் இன்று (வெள்ளிக்கிழமை) பெர்த்தில் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ஹோல்டர் தங்கள் அணி முதலில் பேட் செய்யும் என்று தெரிவித்தார். இதன் படி முதலில் களம் இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஸ்மித்தும், கெய்லும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர்.
 
தாறுமாறாக பவுன்ஸ் ஆகும் பெர்த் மைதானத்தில் எதிபார்த்தது போலவே இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் ஆக்ரோஷம் காட்டினர். இதனால், வெஸ்ட் இண்டீஸ் அணி 44.2 ஓவர்களில் அந்த அணி 182 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி தரப்பில் சமி 3 விக்கெட்டுகளையும் உமேஷ் யாதவ், ஜடேஜா  ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
 
இதையடுத்து 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணியில் தவானும், ரோகித் சர்மாவும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். இந்திய அணியின் பந்துவீச்சுக்கு தக்க பதிலடி கொடுத்த வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சாளர்கள் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான இந்த மைதானத்தில் துல்லியமாக பந்து வீசி இந்திய பேட்ஸ்மேன்களுக்கு கடும் நெருக்கடி அளித்தனர்.
மேலும் அடுத்த பக்கம்..

குறிப்பாக டெய்லர் கடும் ஆக்ரோஷம் காட்டினார். இதனால், தவான்(9), ரோகித் சர்மா (7) என சொற்ப ரன்களில்  வெளியேறி ஏமாற்றம் அளித்தனர். 20 ரன்களுக்குள் 2 முக்கிய விக்கெட்டுகளை இழந்ததால் ரசிகர்கள் பதட்டத்துக்குள்ளாயினர். இருப்பினும், ஓரளவு நம்பிக்கை காட்டிய விராட் கோலி 33 ரன்களில் ரஸ்சல் பந்தில் சாமுவேல்ஸிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். பொறுமையுடன் விளையாடி வந்த ரகானேவும் 14 ரன்களில் வெளியேறி ஏமாற்றம் அளித்தார்.
இதைத்தொடர்ந்து 5வது விக்கெட்டுக்கு, ரெய்னாவும், கேப்டன் தோனியும் ஜோடி சேர்ந்தது. இந்த அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து  செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சுரேஷ் ரெய்னா 22 ரன்களில் கீப்பர் கேட்ச் ஆகி வெளியேறினார். அப்போது இந்திய அணி 107 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தது. வெற்றி பெற அப்போது 76 ரன்கள் தேவைப்பட்டதால் ஆட்டத்தில் திடீர் பரபரப்பு தொற்றிகொண்டது. சிறிது நேரத்தில் ஜடேஜா 13 ரன்களில் தேவையில்லாத ஷாட் அடித்து வெளியேறினார்.
 
இருப்பினும்  நிலைத்து நின்று ஆடிய கேப்டன் தோனி, அஷ்வினுடன் சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அஷ்வினும் அவருக்கு நல்ல கம்பெனி கொடுத்தார். இதனால், இந்திய அணி 39.1 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தோனி கடைசி வரை ஆட்டமிழக்காமல் 45 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார். அஷ்வின் 16 ரன்களுடன் களத்தில் இருந்தார். 7 வது விக்கெட்டுக்கு தோனியும், அஷ்வினும் இணைந்து 51 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது. இந்திய அணியின் முகம்மது சமி ஆட்ட நாயகன் விருதை பெற்றார்.
 
இந்த வெற்றியின் மூலம், உலகக்கோப்பை போட்டியின்  காலிறுதிக்கு இந்திய அணி தகுதி பெற்றுள்ளது. இந்தத் தொடரில் இந்திய அணி பெறும் 4 வது தொடர்ச்சியான வெற்றி இதுவாகும். இதன் மூலம்  ”பி” புள்ளிப்பட்டியலில் இந்திய அணி தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது.