1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 17 மார்ச் 2024 (22:49 IST)

WPL 2024: ஈ சாலா கப்.. வரலாற்றில் முதல்முறையாக வெற்றி வாகை சூடியது RCB!

RCB
மகளிர் பிரிமியர் லீக் (WPL 2024) போட்டியில் இன்று டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை இறுதி போட்டியில் எதிர்கொண்ட ஆர்சிபி அணி கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது.



மகளிர் பிரிமியர் லீக் போட்டிகளில் 5 அணிகள் மோதி வந்த நிலையில் ஆர்சிபி அணி பெரும் முயற்சியுடன் களமிறங்கி இறுதி போட்டி வரை வந்து சேர்ந்தது. இன்று நடைபெற்ற இறுதி போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், ஸ்மிருதி மந்தனா தலைமையிலான ஆர்சிபி அணியும் கோப்பைக்காக மோதிக் கொண்டன.

இரு அணிகளுமே இதுவரை மகளிர் பிரிமியர் லீகில் ஒரு கோப்பைக் கூட வெல்லாத நிலையில் இந்த போட்டி மிகவும் எதிர்பார்க்கப்பட்டது. முதலில் பேட்டிங் இறங்கிய டெல்லி அணி ஆரம்பத்தில் நன்றாக விளையாடி வந்தாலும் 7வது ஓவரில் விக்கெட்டில் சறுக்க ஆரம்பித்தது. தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்த டெல்லி அணி 18வது ஓவரிலேயே 113 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

சேஸிங்கில் இறங்கிய ஆர்சிபி அணியின் ஸ்மிருதி மந்தனா (31), சோபி டெவைன் (32) , எலிஸ் பெரி (35), ரிச்சா கோஸ் (17) என நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்து 8 விக்கெட்டுகள் 3 பந்துகள் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தி மகளிர் பிரிமியர் லீக் கப்பை கைப்பற்றியுள்ளது.

மகளிர் பிரிமியர் லீக், ஐபிஎல் என இரு வகை போட்டிகளில் ஏதாவது ஒன்றிலாவது ஆர்சிபி கோப்பை வெல்லாதா என்று எதிர்பார்ப்புடன் காத்திருந்த ரசிகர்களுக்கு ஆர்சிபியின் இந்த முதல் வரலாற்று வெற்றி கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K