வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: புதன், 18 நவம்பர் 2015 (17:45 IST)

சூதாட்ட வழக்கு : ஸ்ரீசாந்த் உள்ளிட்ட 36 பேருக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

ஐபிஎல் சூதாட்ட வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட ஸ்ரீசாந்த் உள்ளிட்ட 36 பேருக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
 

 
2013ஆம் ஆண்டு நடைபெற்ற 6ஆவது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய ஸ்ரீசாந்தும், அவரது சக விளையாட்டு வீர்ர்களான அஜித் சண்டிலா மற்றும் அங்கீட் சவான் ஆகியோரும் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டிருந்தது.
 
மேலும், நிழல் உலக தாதா தாவூத் இப்ராகீம், அவருக்கு நெருக்கமான சோட்டா ஷகில் ஆகியோர் ஐ.பி.எல். ஸ்பாட் பிக்சிங் சூதாட்டத்தை பின்னால் இருந்து இயக்கினார்கள் என்று டெல்லி காவல் துறையினர் குற்றப் பத்திரிகையில் தெரிவித்து இருந்தனர்.
 
தாம் எந்தவிதமான குற்றமும் செய்யவில்லை என்று இந்த மூன்று வீர்ர்களும் வலியுறுத்தி வந்தனர். இவர்களுக்கு எதிரான ஆதாரங்கள் போதாது என்று கூறிய நீதிமன்றம் இவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களில் இருந்து இவர்களை 25-07-15 சனிக்கிழமை அன்று விடுவித்தது.
 
இந்நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் ஸ்ரீசாந்த் உள்ளிட்ட 36 பேரின் விடுதலையை எதிர்த்து டெல்லி காவல் துறையினர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர்.
 
குற்றச்சாட்டில் இருந்து விடுவித்ததில் பல்வேறு தவறுகள் இருப்பதாக மனுவில் டெல்லி காவல் துறையினர் தெரிவித்திருந்தனர்.
 
இந்த மனு இன்று புதன்கிழமை [18-11-15] விசாரணைக்கு வந்த போது நீதிபதி சித்தார்த் மிருதுல், விடுவிக்கப்பட்ட ஸ்ரீசாந்த், சாண்டிலா, சவான் உட்பட 36 பேருக்கு பதில் அனுப்புமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.
 
மேலும், டெல்லி காவல் துறையினரிடம் இவர்களை குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவித்த விசாரணை நீதிமன்ற ஆவணங்களையும் நீதிமன்றம் கோரியுள்ளது. விசாரணையை டிசம்பர் மாதம் 16-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.