1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 5 அக்டோபர் 2018 (11:12 IST)

ரன்மெஷினின் 24 வது சதம் – சச்சினை முந்திய கோலி

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் இந்திய கேப்டன் விராட் கோலி சதம் அடித்து அசத்தியுள்ளார்.


மேற்கிந்திய தீவுகள் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்து கிரிக்கேட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி நேற்று ராஜ்கோட்டில் தொடங்கியது. டாஸ் ஜெயித்து முதலில் பேட் செய்து வரும் இந்திய அணி அபாரமாக விளையாடி ரன் குவித்து வருகிறது. இந்திய அணியின் ரன்ரேட் ஓவருக்கு நான்கு ரன் என்ற வீதத்தில் உள்ளது. இந்திய பேட்ஸ்மேன்களை கட்டுபடுத்த முடியாமல் மே.இ.தீ. அணி பௌலர்கள் தடுமாறி வருகின்றனர்.

ஏற்கனவே இந்தப்போட்டியில் அறிமுக வீரர் பிருத்விஷா சதமடித்து அசத்தியுள்ள நிலையில் தற்போது இந்திய அணியின் கேப்டன் வீராட் கோலியும் சதமடித்து உள்ளார். இது கோலியின் 24 சதமாகும்.

தற்போது விளையாடி வரும் கிரிக்கெட் வீரர்களில் டெஸ்ட், ஒருநாள் மற்றும் இருபது ஓவர் போட்டி என அனைத்து வகைப் போட்டிகளிலும் சிறப்பாக விளையாடும் வீரர்களில் தலை சிறந்த வீரராக கோலி செயல்பட்டு வருகிறார். இதுவரை இந்த ஆண்டில் 9 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள கோலி அடிக்கும் 4 வது சதம் இதுவாகும். மே.இ.தீ. அணிக்கெதிராக அவரது இரண்டாவது சதமாகும்.

இந்த சதத்தின் மூலம் குறைந்த இன்னிங்ஸில் 24 சதங்களை அடித்த வீரர்கள் வரிசையில் சச்சினை முந்தியுள்ளார். சச்சின் 125 இன்னிங்ஸ்களில் 24 சதம் அடித்துள்ளார். கோலி 123 இன்னிங்ஸ்களில் 24 வது சதத்தை அடித்துள்ளார். டான் பிராட்மேன் 66 இன்னிங்ஸ்களில் இந்த சாதனையை செய்து முதலிடத்தில் உள்ளார்.

தொடர்ந்து விளையாடி வரும் இந்திய அணி 108 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 470 ரன்களை சேர்த்துள்ளது. மற்றொரு வீரரன ரிஷப் பாண்ட் அதிரடியாக விளையாடி 92 ரன்களோடு சதத்தை நெருங்கி விளையாடி வருகிறார்.