1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. ‌கி‌றி‌ஸ்ம‌ஸ்
Written By Sasikala

கிறிஸ்துமஸ் விழாவில் இடம் பெறும் சாண்டா கிளாஸ் யார் தெரியுமா...?

கிறிஸ்துமஸ் நாளில் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் உற்சாகப்படுத்துபவர் சிவப்பு அங்கி அணிந்து பரிசுப் பொருட்கள் மூட்டையுடன் வரும் வெண்தாடி தாத்தாதான். இவரது ஆங்கிலப் பெயர் சாண்டா கிளாஸ்.

கிறிஸ்து பிறந்த பின்பு 270 வருடத்தில் (15 March)காலத்து ரோம சாம்ராஜ்யத்தில் இருந்த துருக்கியின் பாடாரா பகுதியில் லைசியா என்ற துறைமுக ஊரில் பிறந்தார் நிகோலாஸ்.
 
தனது இளம் வயதில் பெற்றோரை இழந்த நிகோலாஸ் ஏழை மக்களுக்கு உதவுவதே இயேசு அன்பை பிறருக்கு சொல்லும் எளியமுறையாக கருதி அநேக ஏழை மக்களுக்கு உதவி செய்து வாழ்ந்தார். கிறிஸ்துவ இறையியல் பணியை சிறப்பாக செய்த நிகோலாஸ், லைசியா பகுதியின்  பிஷப் பதவியை ஏற்றார். பிஷப் பதவியில் இருந்த பொழுது, டிசம்பர் 6ம் தேதி இரவு வந்து கிறிஸ்துமஸ் பரிசுகளை கொடுப்பார். பழங்கள்  சாக்லெட்கள், சிறு பொம்மைகள், சிறு பொருட்களை குழந்தைகளுக்கு பரிசாக கொடுப்பார்.
 
ரோம் நகர பேரரசன் டயோக்ளீஸ் காலத்தில் கிறிஸ்தவர்கள் வேட்டையாடப்பட்டபோது, பிஷப் நிக்கோலாஸும் சிறையில் தள்ளப்பட்டார். பின்பு பேரரசர் கான்ஸ்டான்டின் காலத்தில் விடுதலை செய்யப்பட்டு மீண்டும் ஏழை மக்களுக்கு உதவும் பணியை தொடர்ந்து பின்னர் தனது 73-  ம் வயதில் (6 December 343) இறைவனடி சேர்ந்தார். அவர் இறந்த பின்னர் அவரது சடலம் துருக்கியில் உள்ள மைரா என்ற இடத்தில்  அடக்கம் செய்யப்பட்டது. 
 
மக்களிடம் அவர் காட்டிய கருணை, அன்பின் காரணமாகவும் அவரது தயாள குணம் காரணமாகவும் இன்றளவும் குழந்தைகள் மனதில் வாழ்ந்து வருகின்றார். செயின்ட் நிகோலாஸ் என்பது டச்சு மொழியில் சின்டர்க்ளாஸ் என்று மருவியது. பின்னர் ஆங்கிலம் பேசும் மக்கள்  அவரை சான்டா கிளாஸ் என அன்புடன் அழைத்தனர். நிகோலாஸ் காலத்தில் பிஷப்புகள் அணிந்திருந்த சிவப்பு - வெள்ளை அங்கியே  கிறிஸ்துமஸ் தாத்தாவின் உடையாகிவிட்டது.