வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. கரு‌த்து‌க் கள‌ம்
  2. எழுத்தாளர்கள்
  3. அ.கேஸ்டன்
Written By அ.கேஸ்டன்
Last Updated : புதன், 18 ஜனவரி 2017 (18:06 IST)

ஜல்லிக்கட்டு தடை: இது ஜல்லிக்கட்டுக்கான தடை அல்ல என்பது எத்தனை பேருக்கு தெரியும்!

ஜல்லிக்கட்டு தடை: இது ஜல்லிக்கட்டுக்கான தடை அல்ல என்பது எத்தனை பேருக்கு தெரியும்!

தமிழகம் முழுவதும் இன்று ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. போராட்டத்துக்கு பல்லாயிரக்கணக்கானவர்கள் தங்கள் ஆதரவை அளித்து வருகின்றனர். தமிழர்களின் கலாச்சாரம், பாரம்பரியம், வீரவிளையாட்டு என கூறி ஜல்லிக்கட்டு தடையை நீக்க போராட்டம் நடத்தி வருகின்றனர்.


 
 
இந்த போராட்டம் வெறும் உணர்ச்சிகளால் தான் நடந்து வருகிறது. ஆனால் இந்த ஜல்லிக்கட்டிற்கு பின்னால் இருக்கும் சர்வதேச அரசியல் என்ன? ஜல்லிக்கட்டு எதற்காக நடத்தப்படுகிறது? ஜல்லிக்கட்டு தடைபட்டால் நாம் எதிர்கொள்ள இருக்கும் பாதிப்புகள் என்ன என்பது யாருக்கும் தெரியாது.
 
ஜல்லிக்கட்டு என்பது வெறும் வீர விளையாட்டல்ல. அது ஒரு உறவு பிணைப்பு. மாடுகளும் மனிதர்களும் மோதிக்கொள்ளும் யார் ஜெயிக்கிறார்கள் என்ற பந்தையப்போட்டி அல்ல ஜல்லிக்கட்டு. ஜல்லிக்கட்டில் கவுரவிக்கப்படுவதும், ஹீரோவாக பார்க்கப்படுவதும் மாடுபிடி வீரர்கள் அல்ல மாடுகள் தான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
 
எங்கு ஜல்லிக்கட்டு நடந்தாலும் அங்கு இந்த மாடுபிடி வீரர் வருகிறார் என மக்கள் வர மாட்டார்கள். இந்த ஜல்லிக்கட்டில் கலந்துகொண்ட இந்த காளை வருகிறது இன்றைய ஜல்லிக்கட்டில் என்று தான் மக்கள் அங்கு வருகிறார்கள். ஜல்லிக்கட்டால் மாடுகள் துன்புறுத்தப்படுகிறது என்கிறார்கள் இது முற்றிலும் முரண். வெளிநாடுகளில் உள்ள குதிரைகள் எப்படி பந்தயத்துக்காக பழக்கப்பட்டுத்தப்படுகிறதோ அதே போல நம்முடைய மாடுகள் இதற்காகவே பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறது, அதுதான் இயல்பு அது மாடுகளுக்கு துன்புறுத்தல் அல்ல.
 
சீறிப்பாயும், முரண்டு பிடிக்கும் மாடுகள் பெண்களையோ, குழந்தைகளையோ ஒன்றும் செய்வதில்லை. அது தான் நம் நாட்டு மாடுகள் அதற்கு எங்கு சீற வேண்டும் போன்ற அனைத்தும் பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறது. பழக்கமில்லாத ஒரு உயிரினத்தினை ஜல்லிக்கட்டுக்காக பயன்படுத்தினால் சொல்லலாம் அது மிருகவதை என.
 
ஜல்லிக்கட்டு என்பது வன்மையோ, கொடுமையோ துன்புறுத்தலோ இல்லை. வேலை செய்வதே துன்புறுத்தல் என்றால் வேலை செய்யாமலே எந்த ஜீவன் வாழ முடியும். எறும்பின் முதுகில் ஏறி உட்கார்ந்தால் அது கொடுமை என கூறலாம். ஆனால் நமது நாட்டு மாடுகள் ஒன்றும் எறும்பு அல்ல, அது வளர்க்கப்பட்டிருக்கும் விதம், அதன் மரபனுக்கள் அனைத்தும் இதற்காகவே பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறது. தாங்கள் தெய்வமாக தங்கள் வீட்டு பிள்ளை போல வளர்க்கும் காளைகளை தழுவினால் எப்படி அது துன்புறுத்தல் ஆகும்.
 
மாடுகள் தங்கள் வீட்டு பிள்ளைகள் என கூறுகிறார்கள் மாடுகளை வளர்ப்பவர்கள். வெளியூரில் ஏதாவது விசேஷம் என்பதால் வீட்டில் உள்ள அனைவரும் போக வேண்டிய சூழல் வந்தாலும் யாராவது ஒருவர் வீட்டில் இருப்பார் மாடுகளை கவனிக்க. இதில் இருந்தே புரிந்துகொள்ளலாம் மாடுகள் மீதும் அவர்கள் கொண்டுள்ள அன்பையும் தங்கள் வாழ்வோடு மாடுகள் இணைந்துள்ளதை.
 
ஜல்லிக்கட்டில் தன்னை தொட வந்தால் சீறிப்பாயும் காளையின் மூக்கு கயிரை வீட்டில் உள்ள சின்ன குழந்தை கூட இழுத்து விளையாடும் ஆனால் மாடு அந்த குழந்தையை ஒன்றும் செய்யாது. இது தான் வளர்ப்பு என்பது.
 
பழங்காலத்தில் கால்நடைகளின் எண்ணிக்கையை பொறுத்தே அவன் பணக்காரன் என்பதே தீர்மானிக்கப்படும். அண்டை நாட்டுப்படை போர் தொடுக்க வந்தால் முதலில் அவர்கள் கொள்ளையடிப்பது அந்த நாட்டின் கால்நடைகளைத் தான். நொண்டி மாடு வைத்திருந்தால் கூட அவன் வாழ்ந்துவிடுவான் ஆனால் நொண்டி மாடு கூட இல்லாதவன் நொண்டியாகிவிடுவான் என்ற பழமொழி கிராமங்களில் உண்டு.
 
மாடுகள் தங்கள் வாழ்வாதாரம். நிலத்தை உழுது, உரத்தை கொடுத்து, பாலை கொடுத்து, உழைப்பை கொடுத்து உழவனை வாழ வைத்தது மாடு. ஆனால் இன்று ஜல்லிக்கட்டை நிறுத்தி, மழையை பொய்க்க வைத்து, நிலத்தை தரிசாக்கி, மாட்டை அடிமாட்டு விலைக்கு விற்று தற்கொலை செய்யும் நிலைக்கு சென்றுவிட்டோம்.
 
ஜல்லிக்கட்டு தடை என்பது ஜல்லிக்கட்டுக்கான தடையல்ல என்பதை நாம் எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும். இது விவசாயத்திற்கான தடை, ஜல்லிக்கட்டினால் சங்கிலி தொடர்போல விவசாயமும் மனிதனின் வாழ்க்கையும் பாதிக்கப்படுகிறது.
 
ஜல்லிக்கட்டு நின்றுவிட்டால் நாட்டு மாடுகளை விற்று விடுவோம், இதனால் எல்லாமும் நம்மை விட்டு போய்விடும் மாடுகள் மூலம் நான் அடைந்து வந்த பலவற்றை இறக்குமதி செய்யும் நிலைக்கு வந்து வெளிநாட்டினரின் கட்டுப்பாட்டுக்குள் நாம் வந்துவிடுவோம். இது ஒரு சர்வதேச சதி என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
 
பசுமை புரட்சி என்ற பெயரில் நமது உணவு வகைகளை விஞ்ஞானிகளும், மேலை நாடுகளும் ரசாயணமாக்கிவிட்டார்கள். தற்போது மிச்ச மீதியிருக்கிற விவசாயத்தையும் குழி தோண்டி புதைத்து நிலத்தை நஞ்சாக்கி நஞ்சை உணவாக்க முயலும் நாம் உணவுக்கு பதிலாக கல்லையோ, பணத்தையோ திண்ண முடியாது நம்முடைய தலைமுறைகளை பாதுகாக்கவும், நம் குழந்தைகளுக்கும் வாரிசுகளுக்கும் உண்ண உணவுகளை கொடுக்க வழி செய்ய ஜல்லிக்கட்டை மீண்டும் நடத்த மீண்டும் மீண்டும் முயற்சி செய்வோம்.