1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Murugan
Last Modified: வெள்ளி, 14 ஜூலை 2017 (19:16 IST)

மின்னஞ்சலையும் உயிலாக அங்கீகரிக்க விரைவில் புதிய சட்டம்

உயில் எழுதுவது தொடர்பான சட்டங்கள் நவீன உலகத்திற்கு ஏற்றவாறு மேம்படுத்தப்பட வேண்டும் என இங்கிலாந்து மற்றும் வேல்ஸின் சட்ட ஆணையம் தெரிவித்துள்ளது.


 

 
தற்போதைய சட்டங்கள் தெளிவற்றதாகவும், உயில் எழுதுவதிலிருந்து மக்களை விலக்கி வைக்கவும் கூடும் என அவர் கூறியுள்ளார். தவிர்க்க முடியாத சூழல்களில், குறுஞ்செய்தி, மின்னஞ்சல் மற்றும் பிற மின்னணு தகவல் தொடர்புகள் மதிக்கத்தக்க உயிலாக அந்த சட்டங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும்.
 
இது தொடர்பான முன் மொழிவுகள் குறித்த ஆலோசனைகளையும் அந்த ஆணையம் துவங்கியுள்ளது.
 
`காலாவதியானது`
 
தற்போது, சட்டப்பூர்வமான ஒரு உயில் என்பது கண்டிப்பாக 18 வயதுக்கு மேற்பட்டவர்களால் எழுதப்பட்ட ஒன்றாக இருக்க வேண்டும். மேலும் 18 வயதுக்கு மேற்பட்ட இரு சாட்சியங்களின் முன்னிலையில் தெளிவான மனநிலையுடன் அந்த உயில் எழுதப்பட்டிருக்க வேண்டும்.
 
ஆனால் உயிலை உருவாக்குபவர் தனது விருப்பத்தை வேறு வடிவத்தில் அளிப்பதை அனுமதிக்கும் வகையில் தற்போது நடைமுறையில் இருக்கும் விதிகளை மாற்ற வேண்டும் என சட்ட ஆணையம் விரும்புகிறது.
 
கார் விபத்தால் பாதிக்கப்பட்ட ஒருவர் தன்னுடைய உயிலை சட்டப்படி உருவாக்காமல், மின்னணு தகவல் தொடர்பு அல்லது மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி வாயிலாக தெரிவிக்கலாம் என அந்த ஆணையம் எடுத்துக்காட்டாக தெரிவித்துள்ளது. பின்னர் அவரின் குடும்பத்தினர் அந்த மின்னணு தகவல் தொடர்பு செய்திகளை சட்டப்பூர்வமான உயிலாக கருதி, நீதிமன்றத்தில் விண்ணப்பிக்கலாம்.
 
நீதிபதி அனுமதி அளித்த பின்னரே, அந்த மின்னணு செய்திகள் உயிலாக அங்கீகரிக்கப்படும். மின்னணு தகவல் தொடர்பு மூலமாக பெறப்படும் உயில்கள், குடும்ப சண்டைகளுக்கு காரணமாகலாம் அல்லது அதனை மோசமாக்கலாம் என சட்ட ஆணையம் ஒப்புக் கொண்டுள்ளது.
 
தற்போதைய சூழலில் 40 சதவீத மக்கள் தங்கள் உயிலை தயார் செய்யாமலே மரணமடைவதால், மின்னணு தகவல் தொடர்பு செய்திகள் நீதிமன்றங்கள் மூலமாகத்தான் உயிலாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என சட்ட ஆணையம் தெரிவித்துள்ளது. உயில் எழுதுவது நேரடியாக இருக்க வேண்டும். ஆனால் அதற்கான சட்டங்கள் தெளிவற்றதாகவும், காலாவதியானவையாகவும் இருக்கின்றன.`என சட்ட ஆணையாளர் பேராசிரியர் நிக் ஹாப்கின்ஸ் தெரிவித்துள்ளார்.
 
ஒருவர் தன்னுடைய இறுதி விருப்பத்தை கடுமையான விதிகளை பின்பற்றி உயிலாக உருவாக்கவில்லை என்றால், அது குறித்து நீதிமன்றம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க முடியாது. மேலும், முடிவெடுக்கும் திறனை பாதிக்கக் கூடிய `மறதி நோய்` போன்றவற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் நபர்கள் குறித்து சட்டத்தில் தெளிவான வரையறை இல்லை.
 
'இவை சரியானவை அல்ல. நாங்கள் நவீன உலகிற்கு பொருந்தக் கூடிய சட்டங்களை கொண்டு வர விரும்புகிறோம்.' எங்களுடைய தற்காலிக முன்மொழிவுகள் இந்த விடயங்களை சட்டப்பூர்வமாக தெளிவுபடுத்துவதற்கு மட்டுமல்லாமல், மக்களின் கடைசி ஆசைகளுக்கு சிறப்பான மதிப்பை அளிக்கவும் உதவும் என அவர் தெரிவித்தார்
 
இந்த ஆலோசனை நிகழ்வுக்கு நவம்பர் 10-ஆம் தேதியுடன் காலக்கெடு நிறைவடைகிறது.