வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: செவ்வாய், 8 அக்டோபர் 2019 (19:50 IST)

பேரண்டம் பற்றிய கண்டுபிடிப்புகள்: மூன்று விஞ்ஞானிகளுக்கு இயற்பியல் நோபல் பரிசு

பேரண்டத்தைப் பற்றி முற்றிலும் வியக்கத்தக்க கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியதற்காக மூன்று விஞ்ஞானிகளுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது.

கனடாவில் பிறந்த 84 வயதான ஜேம்ஸ் பீட்பிள்ஸ், டிடியர் குவிலாஸ், மைக்கல் மேயர் ஆகிய மூவருக்கும் இந்த விருது கூட்டாக அளிக்கப்பட்டுள்ளது.

நமது பேரண்டம் பெருவெடிப்பின் மூலம் தோன்றியது முதல், விரிவடைந்து இன்றைய நிலையை அடைந்துது வரையிலான விஷயங்களைப் புரிந்துகொள்ள உதவுவது விண்வெளி நுண்ணலை பின்னணி கதிர்வீச்சு (காஸ்மிக் மைக்ரோவேவ் பேக்ரவுண்ட் ரேடியேஷன்). இது 1965ல் கண்டுபிடிக்கப்பட்டது.

மற்றவர்களோடு இணைந்து, பேரண்டத்தை இணைக்கும் இந்த கதிர்வீச்சு இருப்பதை கணித்தவர் பீபிள்ஸ். பேரண்டத்தில் 95 சதவீதம் நிரம்பியுள்ள இருண்ட ஆற்றல் மற்றும் இருண்ட பொருள் (Dark energy and dark matter) குறித்த ஆய்வுக்கும் பீபிள்ஸ் முக்கியப் பங்களிப்புகள் செய்துள்ளார். இவர் தற்போது அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் உள்ள பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் உள்ளார்.

50 ஒளி ஆண்டு தூரத்தில் உள்ள சூரியனைப் போன்ற ஒரு நட்சத்திரத்தை சுற்றிவரும் 51 பெகாசி என்ற ஒரு வாயுக் கோள் ஒன்றினைக் கண்டுபிடித்ததற்காகவே டிடியர் குவிலாஸ், மைக்கல் மேயர் ஆகிய இருவரும் நோபல் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

ஒளியின் திசைவேகம் வினாடிக்கு சுமார் 3 லட்சம் கி.மீ. இந்த வேகத்தில் ஒளி ஓர் ஆண்டு பயணித்தால் செல்லக்கூடிய தூரமே ஓர் ஒளியாண்டு தூரம் ஆகும். சூரியனைப் போன்றதொரு நட்சத்திரத்தை சுற்றிவரும் கோள் ஒன்றினை சூரியக் குடும்பத்துக்கு வெளியே கண்டுபிடித்தது இதுவே முதல் முறை.