வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. »
  3. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  4. »
  5. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Updated : சனி, 12 ஏப்ரல் 2014 (16:54 IST)

அபூர்வப் படங்களில் அழியாக் காவியம்-இராமாயணம்

150 ஆண்டுகளில் முதல் முறையாக பிரிட்டிஷ் நூலகம், இந்திய இதிகாசமான இராமாயணத்தின் பிரம்மிப்பூட்டும் பழங்கால ஓவியங்களை காட்சிக்கு வைத்துள்ளது. இந்தப் படத்தின் வலதுபுறத்தின் மேற்பகுதியில் தனக்கு பிறகு இராமன் அரசனாக பதவியேற்பார் என்பதை தசரதன் கூறுவதாக தீட்டப்பட்டுள்ளது.




17 ஆம் நூற்றாண்டில் தீட்டப்பட்ட இந்த ஓவியங்கள் 19 ஆம் நூற்றாண்டு வரை இந்தியாவுக்கும் பிரிட்டனுக்கும் இடையே இங்கொரு பகுதியும் அங்கொரு பகுதியுமாக இருந்து வந்தன. ஆனால் இப்போது டிஜிட்டல் வடிவத்தில் பிரிட்டிஷ் மற்றும் மும்பையிலுள்ள CSMVS அருங்காட்சியகம் ஆகியவை இணைந்து இதை முழுமைப்படுத்தியுள்ளன. இந்தப் படத்தில் இராமர் தனது மனைவி மற்றும் தம்பியுடன் காட்டுக்கு புறப்படுவதை காணலாம்.



இந்த ஓவியங்களில் இராமரின் வனவாசம் தொடர்பான காட்சிகள் இடம்பெறுகின்றன. இந்தப் படம் அவர் ஒரு கானகத்தில் ஒரு பாறை மீது நின்றுகொண்டு சுற்றியுள்ள மரம் செடி கொடிகளை பார்ப்பதாக வரையப்பட்டுள்ளது.



மேவார் இராமாயணம் எனும் பெயரில் தீட்டப்பட்டுள்ள இந்தத் தொடர் ஓவியத் தொகுப்பில் மொத்தமாக 1200 பக்கங்கள் உள்ளன. அந்தக் கதையை ஒருவரே எழுதியிருந்தாலும் ஓவியங்கள் பலரால் தீட்டப்பட்டுள்ளன. இந்த ஓவியத்தில் இராமரின் பாதுகையை பரதன் சிம்மாசனத்தில் வைத்து ஆட்சி செய்வதை காணலாம்.



இந்த ஓவியத்தில் இராமரும், இலக்குவனும் சீதையை மீட்பதற்கு வானரப் படைகளின் உதவியை கோரும் காட்சியைக் காணலாம். சுக்ரீவனுடன் இராமன் ஒரு இணக்கப்பாட்டை எட்டுவதையும் இந்தப் படம் காட்டுகிறது.

 

இந்த ஓவியத்தின் ஒரு பகுதி 19 ஆம் நூற்றாண்டில், ராஜஸ்தான் மாநிலத்தில் பணியாற்றிய பிரிட்டிஷ் அதிகாரி ஒருவருக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டவையாகும். இந்த படத்தில் சீதையை மீட்பதற்கு சுக்ரீவன் தனது படைகளை பிரித்து அனுப்புவதையும், இராமன் தனது கணையாழியை அனுமனிடம் அளிப்பதையும் காணலாம்.



இலங்கைத் தீவில் அரக்கிகள் சூழ சீதை சிறை வைக்கப்பட்டுள்ளதை இந்தப் படம் காட்டுகிறது. தன்னை மீட்கும் பணியை அனுமன் செய்ய முடியாது, அந்தப் பெருமை இராமனுக்கு மட்டுமே கிட்டவேண்டும் என சீதை கூறுவதாக தீட்டப்பட்டுள்ளது.



இராவணன் மீது போர் தொடுத்து சீதையை மீட்க இராமனும், இலக்குவனும் இலங்கை பயணமாவதை இந்தப் படம் காட்டுகிறது. வானரப் படைகளுடன் அவர்கள் இலங்கை மீதான தாக்குதல் முன்னெடுப்பதையும் படம் கூறுகிறது.

 

கடுமையாக நடைபெற்ற மோதலில் இலக்குவன் காயமடைவதையும், இறுதியாக இராவணன் தோற்கடிக்கப்படுவதையும் இந்தப் படம் காட்டுகிறது.



உறக்கத்திலிருக்கும் கும்பகர்ணனை எழுப்ப நடைபெறும் முயற்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளன. அவருக்கு முன்னால் பெருமளவு உணவும், இறைச்சியும் வைக்கப்பட்டுள்ளன. அதன் வாசம் காரணமாக அவர் எழுவார் என நம்பப்பட்டது. ஆனால் அவர் தனது வாழ்நாளின் பெரும்பகுதியை உறக்கத்தில் கழிக்கும் விதமாக சபிக்கப்பட்டிருந்தார் என இராமாயணக் கதை கூறுகிறது.



இந்தப் படத்தில் இராணவனனை வெற்றி கொண்டு, சீதையை மீட்ட இராமன் சரயூ நதிக்கரையின் ஓரமாக வெற்றி வீரனாக பவனி வருவது காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அவருடன் வானரப் படைகள், சகோதரர்கள், மற்றும் பலர் அணி திரண்டு செல்கின்றனர்.