1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Updated : புதன், 27 மார்ச் 2019 (09:21 IST)

குசு விட்டு தொல்லை கொடுத்த அதிகாரி மீது வழக்கு தொடுத்த பொறியாளர்

ஆஸ்திரேலியாவில் ஒரு பொறியாளர் தனது முன்னாள் மேற்பார்வையாளர் திரும்பத் திரும்ப தன் மீது துர்நாற்றம் வீசும் வாயுவை வெளியிட்டதாகவும், அதனால் இழப்பீடு வேண்டுமென்றும் கூறி நீதிமன்றத்தை நாடினார்.
 
இந்த விவகாரத்தை பொருத்தவரையில் குசு விட்டதன் மூலம் அந்த பொறியாளர் கொடுமைக்கு உள்ளாகவில்லை என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
 
டேவிட் ஹிங்ஸ்ட் என்பவர் தனது முன்னாள் சக ஊழியர் கிரெக் ஷார்ட், குசுவிட்டதாக புகார் கூறியுள்ளார். மேலும் ஒரு நாளைக்கு ஆறு முறை அளவுக்கு தன் மீது குசு விடப்பட்டதாக ஹிங்ஸ்ட் தெரிவித்துள்ளார்.
 
இதையடுத்து தனது முன்னாள் சக ஊழியர் 1.8 மில்லியன் டாலர்கள், அதாவது கிட்டத்தட்ட 12 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு கடந்த ஆண்டு வழக்கு தொடர்ந்தார். இந்த விவகாரத்தை விசாரித்த நீதிமன்றம் கிரேக் ஷார்ட் செய்தது வம்புக்கு இழுக்கும் செயலல்ல என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
 
ஆனால் 56 வயதாகும் ஹிங்ஸ்ட், கிரேக் ஷார்ட்டின் வாயு காரணமாக கடும் மன உளைச்சலுக்கு உள்ளானதாக தெரிவித்துள்ளார்.
 
''அவர் குசு விட்டுவிட்டு நடந்து சென்று விடுவார்''
 
மிர்கஸ் ஹிங்ஸ்ட் ஒரு ஒப்பந்த நிர்வாகி. மெல்போர்னைச் சேர்ந்த கட்டுமான பொறியாளர். கடந்த 2017-ல் அவர் கட்டுமான பொறியியல் நிறுவனம் ஒன்றின் மீது வழக்கு தொடர்ந்தார். இது ஏப்ரல் 2018-க்கு தள்ளி வைக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பை அவர் மேல் முறையீடு செய்தார். இந்த வழக்கு கடந்த திங்களன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
 
''நான் வேலை செய்யும் அறை மிகவும் சிறியது. மேலும் ஜன்னல்கள் இல்லை. அப்போது எனது அறைக்குள் வரும் கிரேக் ஷார்ட் எனக்கு பின்னால் வந்து குசு விட்டுவிட்டு சென்று விடுவார். ஒருநாளைக்கு ஐந்து அல்லது ஆறு முறையாவது அவர் இப்படிச் செய்வது வழக்கம்'' 
 
கடந்த ஆண்டு நீதிமன்ற விசாரணையின்போது ஆஜரான ஷார்ட்'' நான் அவர் அருகில் குசு விட்டது குறித்து மீண்டும் நினைவுபடுத்த இயலவில்லை. ஒருவேளை ஒன்றிரண்டு முறை நான் அப்படிச் செய்திருக்கலாம்'' என்றார்.
 
இருப்பினும், வேண்டுமென்றே ஹிங்ஸ்டை கவலைக்குள்ளாக்கவேண்டும் அல்லது தொல்லை கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அப்படிச் செய்ததாக ஹிங்ஸ்டன் கூறும் புகாரை அவர் நிராகரித்தார்.
 
ஷார்டை ''திரு. துர்நாற்ற மனிதன்'' என ஹிங்ஸ்ட் விவரிக்கிறார். ஷார்ட் அலுவலகத்தை விட்டு தன்னை துரத்த வேண்டுமென்பதற்காகவே இப்படியொரு சதிச் செயலில் ஈடுபட்டார் என ஹிங்ஸ்டன் கூறுகிறார். மேலும் அந்த கட்டுமான நிறுவனத்தில் அப்படியொரு துர்நாற்றம் சூழ வேலை பார்த்ததால் தனக்கு உளவியல் ரீதியிலான மனக் காயங்கள் ஏற்பட்டன என்கிறார்.
 
நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக ஆரம்பத்தில் ஆஜராகும்போது தாம் ஒழுங்காக வேலை செய்யவில்லை என ஷார்ட் திட்டியதாகவும் வம்பிழுக்கும் விதமாக கைப்பேசியில் மூலம் தொடர்பு கொண்டு தொல்லைகொடுத்ததாகவும், தன்னை ஒரு முட்டாள், அறிவிலி என்றெல்லாம் முத்திரை குத்தியதாகவும் ஹிங்ஸ்ட் கூறியிருந்தார்.
 
முன்னதாக, நீதிமன்ற விசாரணை நேர்மையாக நடக்கவில்லை மேலும் தனது முந்தைய வழக்கில் நீதிபதி ஒருதலைப்பட்சமாக தனக்கு எதிராக நடந்து கொண்டார் என்றும் ஹிங்ஸ்ட் தெரிவித்தார். 
 
ஹிங்ஸ்ட் வழக்கில் மிகவும் வித்தியசமான கருத்துப்பதிவு நடந்திருப்பதாக கூறிய நீதிபதி பிலிப் ப்ரீஸ்ட் வெள்ளிக்கிழமையன்று மேல் முறையீடு வழக்கு தொடர்பாக தீர்ப்பு வழங்கப்படும் என கூறினார்.