வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Papiksha Joseph
Last Modified: சனி, 26 டிசம்பர் 2020 (12:46 IST)

ஒன்றாக வாழ்ந்த மாணவியை கொன்ற நெப்போலியன் வரலாற்று நிபுணர்

ஓலெக் சொகொலவ் எனும் 63 வயது வரலாற்று ஆசிரியர், தன் மாணவியையே சுட்டுக் கொலை செய்து, அவரின் உடல் உறுப்புகளை வெட்டி எடுத்ததை ஒப்புக் கொண்டுள்ளார். இவருக்கு 12.5 ஆண்டுகள் சிறை தண்டை வழங்கப்பட்டிருக்கிறது.
 
ஓலெக் நெப்போலியப் போர்கள் குறித்த வரலாற்று நிபுணர் ஆவார். அனஸ்டாசியா யெஸ்சென்கோ என்கிற 24 வயது மாணவியை, செயின்ட் பீட்டர்ஸ்பெர்க்கில் வைத்து, கொலை செய்த குற்றத்தை இவர் ஒப்புக் கொண்டார்.
 
கடந்த நவம்பர் 2019-ல், ஓர் ஆற்றங்கரையில், யெஸ்சென்கோவின் வெட்டப்பட்ட கைகளை வைத்திருந்த பையுடன் மது அருந்திய நிலையில் கிடந்தார் பேராசிரியர் ஓலெக்.
 
யெஸ்சென்கோவின் மரணம், ரஷ்யாவில் பெண்கள் துன்புறுத்தப்படுவதற்கும், குடும்ப வன்முறைக்கும் பெரிய வேறுபாடுகள் இல்லை என்பதைக் காட்டுகிறது என்கிறார்கள் பெண்கள் உரிமைக்காகப் போராடும் செயற்பாட்டாளர்கள்.
 
இதற்கு முன் பேராசிரியர் ஓலெக் சொகொலவுக்கு எதிராக மாணவ மாணவிகள் கொடுத்த புகார்களை கண்டுகொள்ளாமல் விட்ட செயின்ட் பீட்டஸ்பெர்க் மாகாண பல்கலைக்கழகம் மீது குற்றம்சாட்டுகிறது 7,500 பேருக்கு மேல் கையெழுத்திட்ட ஓர் இணையவழிப் பிரசார மனு.
 
ஓலெக் தற்போது பீட்டர்ஸ்பெர்க் பல்கலைக்கழகத்தில் இருந்தும், பிரான்ஸில் கொடுக்கப்பட்டிருந்த கல்வித் துறை பதவி ஒன்றில் இருந்தும் பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.
 
யெஸ்சென்கோவின் உடல் உறுப்புகளை வெட்டி எடுப்பதற்கு முன், அவரை நான்கு முறை சுட்டதாக, ஓலெக் நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டார்.
 
ஓலெக்கின் வீட்டில், யெஸ்சென்கோவின் மற்ற உடல் பாகங்களையும் கண்டுபிடித்தது காவல்துறை.
 
தெற்கு ரஷ்யாவின் க்ராஸ்னோடார் பகுதியைச் சேர்ந்த யெஸ்சென்கோ, கல்விக்காக பீட்டர்ஸ்பெர்குக்கு வந்தார். இவர் உயிரிழந்த போது ஒரு பட்டமேற்படிப்பு மாணவி.
 
அவர் ஒரு நல்ல மாணவி என அவரோடு அறிமுகமுள்ள ஒருவர் குறிப்பிட்டதாக ரஷ்யாவின் ஆர்.ஐ.ஏ செய்தி முகமை கடந்த 2019 நவம்பரில் குறிப்பிட்டது.
 
யெஸ்சென்கோவின் தாயார், காவல் துறையில் லெஃப்டினன்ட் கர்னலாகவும், அவரது தந்தை ஒரு பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராகவும், அவர் சகோதரர் ரஷ்யாவின் ஜூனியர் காலபந்து அணியில் விளையாடியதாகவும் ரஷ்ய ஊடகங்கள் குறிப்பிட்டிருகின்றன.
 
பேராசிரியர் ஓலெக் சொகொலவுக்கு வழங்கப்பட்ட சிறை தண்டனை, யெஸ்சென்கோவை மீண்டும் உயிரோடு கொண்டு வராது என யெஸ்சென்கோவின் வழக்கறிஞர் அலெக்சாண்ட்ரா பக்சீவா கூறினார். இருப்பினும் நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்றுக் கொள்வதாகக் குறிப்பிட்டார்.
 
நெப்போலியன் போன்று ஆடை அணிய விருப்பம்
 
ஓலெக் சொகொலவ் நெப்போலியன் போன்று ஆடைகளை அணிவதை விரும்பினார். 2014இல் நாடகம் ஆண்டுக்கான அவர் நெப்போலியன் வேடமிட்டதன் படம் இது.
 
ஓலெக் சொகொலவ், தன் மாணவி யெஸ்சென்கோ உடன் குறைந்தபட்சமாக மூன்று ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்துள்ளார். பேராசிரியர் ஓலெக் நெப்போலியன் கால வரலாற்று சம்பவங்களை மீட்டுருவாக்கம் செய்த நாடகங்களை நடத்தினார். அதில் யெஸ்சென்கோவும் பங்கெடுத்தார்.
 
ஓலெக் இதுவரை 12 வரலாற்று ஆய்வறிக்கைகளைப் எழுதியிருக்கிறார். அதில் சில ஆய்வறிக்கைகளை, யெஸ்சென்கோ உடன் இணைந்து எழுதி இருக்கிறார்.
 
பேராசிரியர் ஓலெக் பிரெஞ்ச் மொழி பேசுவதை விரும்பினார், நெப்போலியனைப் போன்ற பாவனைகளைச் செய்தார். நெப்போலியன் நாடகத்துக்குப் பிறகு யெஸ்சென்கோவை ஜோசஃபின் என்றழைத்தார் என மாணவர்கள் ஏ.எஃப்.பி செய்தி முகமையிடம் கூறியிருந்தார்கள்.
 
பொதுவாக அரசர்கள் மற்றும் சமூகத்தில் உயர் அந்தஸ்து உள்ளவர்களை சர் (Sire) என்றழைப்பார்கள். அப்படி தன்னை அழைக்குமாறு ஓலெக் கேட்டுக் கொண்டதாக, மாணவர்கள் ஏ.எஃப்.பி செய்தி முகமையிடம் தெரிவித்திருந்தனர்.
 
யெஸ்சென்கோ தன்னைக் கத்தியால் தாக்கியதாகவும், அதன் பிறகு தான் ஓலெக், துப்பாக்கியால் யெஸ்சென்கோவை சுட்டதாகவும் நீதிமன்றத்தில் கூறினார்.
 
யெஸ்சென்கோவின் பெற்றோர்கள், ஓலெக்கின் வாதத்தை நிராகரித்தனர்.