வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. »
  3. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  4. »
  5. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Updated : திங்கள், 14 ஏப்ரல் 2014 (07:47 IST)

ஹெப்பாடிடிஸ்-சி வகை காமாலை நோய்க்கு புதிய மருந்து

ஹெப்பாடிடிஸ்-சி வகைகாமாலை நோய்க்கு 12 வாரத்திற்குள் நிவாரணம் கொடுக்கும் மருந்து ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த புதிய மருந்தை எடுத்துக்கொண்டவர்களில் 90 சதவிகிதம் பேருக்கு நோய் குணமாகியுள்ளது. காமாலைக்கான சிகிச்சையில் இது ஒரு முக்கியமான திருப்புமுனை என்று கருதப்படுகிறது.

தற்போதுள்ள சிகிச்சை முறைகளில் பாதி நேரத்தில்தான் தான் காமாலையில் இருந்து குணமடைகிறது.
 
மோசமான நோய்
 
காமாலையால் பாதிக்கப்பட்டவர்களின் இரத்தம் அல்லது உடல் நீரின் மூலம் மற்றவர்களுக்கு காமாலை பரவுகிறது.
 
பச்சை குத்தும் ஊசி, போதை மருந்து ஊசி போன்றவற்றின் மூலமும் இது பரவுகிறது.
 
காமாலை மனிதனின் கல்லிரலை பாதிக்கிறது.
 
ஸ்பெயின், ஜெர்மனி, இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் இருந்த 380 நோயாளிகள் மீது இந்த புதிய மருந்தை டெக்ஸாஸ் சுகாதார அறிவியல் மையத்தின் ஆராய்ச்சியாளர்கள் பரிசோதனை செய்துள்ளனர்.
 
அதன் பின்னர் நோயாளிகளை இரு பிரிவுகளாக பிரித்து 12 வாரங்களுக்கும், 24 வாரங்களுக்கும் என கண்காணித்துள்ளனர்.
காமாலை முற்றிய நிலையில் இருந்த நோயாளிகள் இவர்கள். ஆனால் மருந்து உட்கொண்டு 12 வாரங்களுக்கு பின்னர் சோதித்தபோது 208 பேரில் 191 பேருக்கு காமாலை முற்றாக குணமாகியுள்ளது.
 
அதே போன்று 24 வாரங்களுக்கு பின்னர் சோதித்தபோது 172 நோயாளிகளில் 165 பேருக்கு காமாலை முற்றாக குணமாகியுள்ளது.
இந்த ஆராய்ச்சியின் பிரதான ஆராய்ச்சியாளரான டாக்டர் ஃபிரட் புவர்டாட், இது மிகவும் அற்புதமான விஷயம் என்றும், நோயாளிகளுக்கு எதிர்காலம் இருக்கின்றது என்பதை இது காண்பிப்பதாகவும் கூறியுள்ளார்.
 
இந்த புதிய மருந்து காமாலையை உற்பத்தி செய்யும் புரதத்தை குறிவைத்து செயல்படுகிறது, அது உருவாகாமலும், மறு உற்பத்தி செய்யாமல் இருக்கும் வகையில் மருந்து வேலை செய்கிறது.
 
இந்த மருந்து உட்கொள்வதால் அசதி, தலைவலி, வாந்தி போன்ற பக்கவிளைவுகள் ஏற்பட்டுள்ளன.
 
தற்போதுள்ள முறை
 
தற்போது இருக்கும் மருத்துவ முறையில், ஒரு ஆண்டுக்கு ஊசி போடப்படுகிறது. மேலும் இந்த மருந்தால், மன அழுத்தம், அலுப்பு, சுகமின்மை போன்ற எண்ணம் ஆகியவை ஏற்படுகிறது.
 
அத்தோடு காமாலை முற்றியவர்களுக்கு இப்போது இருக்கும் மருத்துவ முறை பாதுகாப்பானதாகவும் இல்லை. மேலும் விஷத்தன்மை அதிகம் இருப்பதால் தற்போது இருக்கும் மருத்துவ முறை அதிகமாகப் பயன்படுத்தபடுவதில்லை.
 
தற்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் மருந்து ஜினோடைப் 1 என்று கூறப்படும் முதல் வகை காமாலைக்கு ஆகும்.
 
பிரிட்டனில் காமாலையால் பாதிக்கப்படுபவர்களில் இந்த வகை காமாலை தான் 45 சதவீதமானவர்களுக்கு ஏற்படுகிறது.
அடுத்து இருக்கின்ற ஜினோடைப் 2 மற்றும் ஜினோடைப் 3 ஆகிய காமாலைகளுக்கு விரைவில் மருந்து கண்டுபிடிக்கப்பட்டு விடும் என்று விஞ்ஞானிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.