1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Updated : செவ்வாய், 22 ஜூலை 2014 (11:38 IST)

காசா மருத்துவமனையில் இஸ்ரேல் தாக்குதல்

மத்தியகிழக்கின் காசா நகரத்தில் மருத்துவமனை ஒன்றில் இஸ்ரேலிய படைகள் நடத்திய ஷெல் தாக்குதலில் ஐந்து பேர் கொல்லப்பட்டும், குறைந்தது ஏழு பேர் காயமடைந்தும் இருக்கின்றனர்.



காயமடைந்தவர்களில் பெரும்பான்மையானோர் மருத்துவப் பணியாளர்கள்.
 
நகரின் கிழக்கேயுள்ள அல் அக்ஸா மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவு, அறுவை சிகிச்சை அறைகள், வரவேற்பறை போன்ற இடங்களில் ஷெல் குண்டுகள் விழுந்ததாக சம்பவத்தைக் கண்டவர்கள் கூறுகின்றனர்.
 
ஹமாஸ் ஆயுததாரிகள் எதிராக இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் மற்ற மற்ற இடங்களில் அதிக எண்ணிக்கையிலானவர்கள் உயிரழந்துள்ளனர்.
 
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருபது பேர் ஒரு தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
 
காசாவிலிருந்து சுரங்கங்கள் வழியாக இஸ்ரேலுக்குள் ஊடுருவ முயன்ற ஆயுததாரிகள் குறைந்தது பத்து பேரை கொன்றுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் கூறுகிறது.
 
ராஜீய முயற்சிகள்
 
இதனிடையே காசாவில் ஏற்பட்டுள்ள வன்முறைகளை நிறுத்தி, சமரச முயற்சிகளை மேலும் முன்னெடுக்கும் வகையிலான ராஜீய நடவடிக்கைகள் எகிப்தில் ஆரம்பித்துள்ளன.
 
ஐநா தலைமைச் செயலர் பான் கி மூன் கெய்ரோ சென்றிரங்கியுள்ளார்.
 
அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஜான் கெர்ரியும் எங்கு சென்று சேருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
இதனிடையே அங்கு உடனடியாக மோதல் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையில் பாதுகாப்பு கவுன்சில் கோரியுள்ளது.
 
காசாவின் இதுவரை கொல்லப்பட்டுள்ள பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 500ஐக் கடந்துள்ளது என்று காசாப் பகுதியில் சுகாதாரத்துறை கூறுகிறது.
 
இதேவேளை நேற்று ஞாயிற்றுக்கிழமை 13 இஸ்ரேலியப் படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.
 
ஐநாவின் மனித உரிமைகள் ஆணையம், காசா தொடர்பில் ஒரு அவசரக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று எகிப்து கோரியுள்ளது.
 
அப்படியான ஒரு கூட்டத்தை எதிர்வரும் புதன்கிழமை நடத்த ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.