1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Modified: சனி, 19 டிசம்பர் 2020 (23:34 IST)

டெல்லி விவசாயிகள் போராட்டம்: "நாளை கோரிக்கைகள் ஏற்கப்படாவிட்டால் டெல்லி - உத்தரப் பிரதேசம் சாலை முடக்கப்படும்"

டிராக்டர்களைத் தவிர்ப்பது குறித்து நாளை காலை 11 மணிக்கு நிர்வாகத்தோடு நடக்கும் பேச்சுவார்த்தையில் கோரிக்கைகள் ஏற்கப்படாவிட்டால் சாலையின் இருபுறமும் முடக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்கள் விவசாயிகள்.
 
இந்திய அரசு புதிதாகக் கொண்டுவந்திருக்கும் 3 விவசாய சட்டங்கள் விவசாயிகளுக்குப் பாதகமாகவும், கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு சாதகமாகவும் இருக்கும் என்று கூறி விவசாயிகள் கடந்த மூன்று வாரங்களாக டெல்லியின் பல எல்லைகளில் போராடி வருகிறார்கள்.
 
டெல்லி - உத்தரப்பிரதேச எல்லையில் அமைந்துள்ள காசிபூரில் இன்று பேசிய அகில இந்திய விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்த சர்தார் வி.எம்.சிங், "டிராக்டர்களின் நடமாட்டத்தைத் தவிர்ப்பது தொடர்பாக நாளை காலை 11 மணிக்கு நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடக்கிறது.
 
விவசாயிகளோடு நிற்கவேண்டும் என்னை பணியில் இருந்து விடுவியுங்கள்: பஞ்சாப் டிஐஜி வேண்டுகோள்
 
அரசாங்கம் எங்கள் கோரிக்கைகளை ஏற்காவிட்டால் நாளை சாலையின் இருபுறத்தையும் முடக்குவோம்" என்று கூறியதாக ஏ.என்.ஐ. செய்தி முகமை தெரிவித்துள்ளது.
 
 
இதனிடையே, விவசாயிகள் போராட்டம் பற்றிப் பேசிய ராஷ்ட்ரிய லோக் தந்த்ரிக் கட்சித் தலைவர் அனுமன் பேனிவால் "மத்திய அரசு விவசாயிகள் போராட்டத்தை ஒடுக்கும் மனநிலையிலேயே இருப்பதாகத் தெரிகிறது. எனவே, டிசம்பர் 26-ம் தேதி ராஜஸ்தானில் இருந்து டெல்லியை நோக்கி 2 லட்சம் விவசாயிகள் மற்றும் இளைஞர்களை அழைத்துவருவது என்று எங்கள் கட்சி முடிவு செய்திருக்கிறது" என்று தெரிவித்தார்.
 
 
ராஜஸ்தான் மாநிலம் நகாவுர் தொகுதியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான அனுமன் பேனிவால், விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக மூன்று நாடாளுமன்றக் குழுக்களில் இருந்து விலகிவிட்டார் என்கிறது பி.டி.ஐ. செய்தி முகமை.