வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By papiksha
Last Updated : வியாழன், 5 மார்ச் 2020 (13:54 IST)

கொரோனா வைரஸ்: "28,529 பேர் கண்காணிப்பில்" இந்தியாவில் நடப்பது என்ன?

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியா முழுவதிலும் 28, 529 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் நாடாளுமன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) தெரிவித்தார்.

மேலும், கொரோனா கண்காணிப்பு பணிகளை ஒருங்கிணைக்க கட்டுப்பாட்டு மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது என தெரிவித்த அவர், அதன் உதவி எண்களைப் பகிர்ந்தார் (011 - 23978046).

இன்று நாடாளுமன்றத்திற்கு வந்த பெரும்பாலான அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முகமூடி அணிந்தே வந்தனர்.

இந்தியாவில் மார்ச் 4ஆம் தேதி வரை 29 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

இந்திய அளவில் கொரோனா வைரஸ் தொடர்பாக நடந்த சில தகவல்களை தொகுத்துள்ளோம் .

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க 'கோமிய பார்ட்டி' நடத்த இருப்பதாக இந்து மகா சபையின் தலைவர் சக்கரபாணி மகராஜ் கூறி உள்ளார். அவர், "டீ பார்ட்டிகளைப் போல கோமியம் பார்ட்டி நடத்த இருக்கிறோம். இதில், கொரோனா எப்படி பரவுகிறது என்பதை எடுத்துச் சொல்லப்படும்." என்றார்.

நாடாளுமன்றத்தில் பேசிய தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி, இந்தியாவில் வைராலஜி லேப் புனேவில் மட்டும் உள்ளதென்றும், இது போன்ற லேபுகளை நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏற்படுத்த வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்தார்.

மதுராவில் உள்ள இஸ்கான் மையத்திற்கு வெளிநாட்டவர்கள் யாரும் 2 மாதங்கள் வர வேண்டாம் எனக் கூறப்பட்டுள்ளது. வர விரும்புவோர் மருத்துவ சான்றிதழை அளிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

டெல்லியில் மார்ச் 12 ,13 நடைபெற இருந்த ஆசிய பாதுகாப்பு மன்ற கூட்டம், கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

பாதி சமைக்கப்பட்ட மீன் மற்றும் கறி உணவுகளுக்குத் தடை விதிப்பதாக லக்னோ மாவட்ட ஆட்சியர் அபிஷேக் பிரகாஷ் கூறி உள்ளார்.
மேற்கு வங்கத்தில் மோதியின் பெயர் அச்சிடப்பட்ட முகமூடிகளை பா.ஜ.கவினர் மக்களுக்கு வழங்கினர்.

இரானில் சிக்கி உள்ள இந்தியத் தொழிலாளர்களை மீட்க இரான் சென்றுள்ளது இந்திய மருத்துவக் குழு. அவர்கள் பரிசோதனை செய்யப்பட்ட பிறகே இந்திய அழைத்து வரப்படுவர் என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.

கொரோனா பாதிப்பிற்கு ஆளானாலும், 2 சதவீதம் மட்டுமே உயிரிழக்க வாய்ப்புள்ளது என்பதால் மக்கள் பதற்றமடைய வேண்டாம் எனத் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கேட்டுக் கொண்டுள்ளார்.