1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Tamilarasu
Last Updated :சென்னை , புதன், 10 செப்டம்பர் 2014 (20:55 IST)

பத்திரிகையாளர்களைக் கண்காணிக்கிறதா சென்னை காவல்துறை?

சென்னையில் வெளிவரும் சில ஆங்கில மற்றும் தமிழ் நாளிதழ்களின் செய்தியாளர்கள் ஒவ்வொருவருக்கும் பொறுப்பாக சில மூத்த காவல்துறை அதிகாரிகளை சென்னை நகர காவல்துறை நியமித்திருப்பதாகக் கூறும் சுற்றறிக்கை ஊடகங்களில் வெளியாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சுற்றறிக்கையில் நான்கு ஆங்கில நாளிதழ்கள், ஏழு தமிழ் நாளிதழ்களின் 26 செய்தியாளர்களுக்கும் பொறுப்பாக துணை ஆணையர், உதவி ஆணையர் மட்டத்தில் அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்தச் சுற்றறிக்கையின் பிரதி நேற்று பகிரங்கப்படுத்தப்பட்ட நிலையில், இது தொடர்பாக சென்னையிலிருக்கும் பத்திரிகையாளர் சங்கங்கள் தங்கள் கண்டனங்களைப் பதிவுசெய்துள்ளன.

இந்தச் சுற்றறிக்கையை பகிரங்கப்படுத்திய சென்னை பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவரான அன்பழகன், இது தொடர்பாக இந்திய பிரஸ் கவுன்சிலிடம் புகார் தெரிவித்திருப்பதாகக் கூறினார்.

சென்னை பிரஸ் கிளப்பும் இதைக் கண்டித்துள்ளது. இது தொடர்பாக பிபிசி தமிழோசையிடம் பேசிய பாரதி தமிழன், இது பத்திரிகையாளர்களை மிரட்டும் செயல்; இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்று குறிப்பிட்டார்.

அதிகாரிகள் கவனித்துக்கொள்ள வேண்டிய பத்திரிகையாளர்களின் பட்டியலில் இடம்பெற்றிருக்கும் செய்தியாளரான முத்தலீஃப், குற்றங்களைக் குறைக்க வேண்டிய காவல்துறை, குற்றங்களை மறைப்பதற்காக இத்தகைய செயல்களில் ஈடுபடுவதாகவும் இதனால், காவல்துறையினருக்கும் செய்தியாளர்களுக்கும் இடையிலான மோதல் அதிகரிக்கும் என்று தெரிவித்தார்.

அரசியல் கட்சிகள் கண்டனம்

காங்கிரஸ், பாரதீய ஜனதாக் கட்சி, தி.மு.க. போன்ற கட்சிகள் இது தொடர்பாக கண்டனங்களைத் தெரிவித்துள்ளன. இது குறித்து பிபிசி தமிழோசையிடம் பேசிய தி.மு.கவின் அமைப்புச் செயலர் டி.கே.எஸ். இளங்கோவன், பத்திரிகையாளர்களைக் கண்காணிப்பதற்கான சென்னைக் காவல்துறையின் இத்தகைய முயற்சி, அரசியல் சட்டத்திற்கு எதிரானது என்று குறிப்பிட்டார்.

இந்நிலையில், சென்னை நகரக் காவல்துறை இது தொடர்பாக வெளியிட்டிருக்கும் அறிக்கையில், காவல்துறையின் மக்கள் தொடர்பு அதிகாரி ஓய்வுபெற்றதையடுத்து, புதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருப்பதாகவும் சில ஊடகங்களில் வெளியானதைப் போல எவ்வித சுற்றறிக்கையும் பிறப்பிக்கவில்லை என்று மறுப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது.