1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By papiksha
Last Updated : புதன், 4 டிசம்பர் 2019 (11:26 IST)

ஜப்பான் தொலைபேசி நிறுவனத்தை 24,000 முறை அழைத்து புகார் செய்த முதியவர் கைது!

தொலைபேசி சேவை நிறுவனத்திதை 24,000 முறை அழைத்த 71 வயது முதியவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
 
அகிடோஷி ஒகாடாமோ என்னும் அந்த முதியவர் வெறும் எட்டு நாட்களில் மட்டும் கேடிடிஐ என்னும் அந்நிறுவனத்தின் இலவச சேவை எண்ணை ஆயிரம் முறைக்கு மேல் தொடர்பு கொண்டுள்ளார்.
 
இரண்டரை வருடங்களாக தொடர்ந்து அந்த முதியவர் தங்களை அழைத்ததாக அந்த நிறுவனம் உள்ளூர் ஊடகத்திடம தெரிவித்துள்ளது.
 
ஒகாடாமோ, தான் அந்த நிறுவனத்திடம் தவறாக நடந்து கொள்ளவில்லை என்றும், தான் பாதிக்கப்பட்டவர் என்றும் தெரிவித்தார்.
 
மேலும் கேடிடிஐ என்ற அந்த தொலைத்தொடர்பு சேவை நிறுவனம் தனது ஒப்பந்தத்தை மீறியதாக ஒகாடாமோ குற்றஞ்சாட்டியுள்ளார் என ஜப்பானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
 
டோக்கியோ மெட்ரோபாலிடன் போலீஸ், "ஒகாடாமோ அந்த நிறுவனத்தை அழைத்து வாடிக்கையாளர் சேவையின் ஊழியரை தவறாக பேசுவார் அல்லது அந்நிறுவனத்தின் பிரதிநிதி தன்னை சந்தித்து மன்னிப்பு கோர வேண்டும் என்று கூறுவார்," என தெரிவித்துள்ளது.
 
சில நேரங்களில் கால் செய்து உடனடியாக துண்டிக்கவே அவர் அந்நிறுவனத்தை அழைப்பார் என்றும் கூறப்படுகிறது.
 
முதலில் தாங்கள் இதுகுறித்து புகார் ஏதும் தெரிவிக்க வேண்டாம் என்று நினைத்ததாகவும் ஆனால் அந்த முதியவர் அடிக்கடி அழைப்பதால் பிற வாடிக்கையாளர்களின் அழைப்பை ஏற்க முடியவில்லை என்றும் கேடிடிஐ நிறுவனம் தெரிவித்துள்ளது.
 
அந்த முதியவர் மீது ஒரு வர்த்தகத்தை `இயல்பாக இயங்கவிடாமல் தடுத்ததாக` குற்றம் பதியப்பட்டுள்ளது.