வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By Murugan
Last Updated : புதன், 11 ஜனவரி 2017 (08:56 IST)

ஜனவரி 19ம் தேதி முதல்வர் பதவி ஏற்கிறார் சசிகலா?

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா, வருகிற 19ம் தேதி முதல்வர் பதவி ஏற்க முடிவெடுத்திருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.


 

 
ஜெ.வின் மறைவிற்கு பின் சசிகலா அதிமுக பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார். அதன் பின் அவரை தமிழகத்தின் முதலமைச்சர் பதவியிலும் அமர வைக்கும் முயற்சியில் அதிமுக அமைச்சர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அவரின் கீழ் செயல்படும்  புதிய அமைச்சரவை கூட தயாராகிவிட்டதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும், தற்போது முதல்வர் பதவியில் இருக்கும் ஓ.பன்னீர் செல்வத்திடமிருந்து ராஜினாமா கடிதத்தை ஏற்கனவே சசிகலா குடும்பத்தினர் வாங்கிவிட்டனர் எனக் கூறப்படுகிறது.
 
அதன்பின், கட்சி நிர்வாகிகளிடம் செல்வாக்கை பெற, அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த 4ம் தேதி முதல் 9ம் தேதி வரை நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு அவர்களிடம் ஆலோசனை செய்தார் சசிகலா.
 
மறுபுறம், மத்திய அரசின் ஒப்புதலைப் பெறும் முயற்சியில் ஈடுபட்டனர். ஜனவரி 12ம் தேதி அன்று சசிகலா முதல்வர் பதவி ஏற்பார் என செய்திகள் வெளியானது. அதற்கான ஒப்புதலைப் பெற ராஜ்பவனில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு தகவல் அனுப்பப்பட்டது. ஆனால் அங்கிருந்து எந்த பதிலும் வரவில்லை. சசிகலா முதல் அமைச்சர் பதவியில் அமர்வதில் மத்திய அரசுக்கு உடன்பாடில்லை எனவும், அதனால்தான் சாதகமான பதில் வரவில்லை எனவும் கூறப்பட்டது. 
 
எனவே, மத்திய அரசின் ஆதரவின்றி, சசிகலா தமிழக முதல் அமைச்சர் ஆக முடியாது என்று தெரிந்து கொண்ட  சசிகலா குடும்பத்தினர், வேறு மாதிரி காய் நகர்த்தினர். அதாவது, மத்திய அரசின் சில திட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பதுதான் அந்த திட்டம். மத்திய அரசின் உதய் திட்டம் மற்றும் நீட் திட்டம் உட்பட சில திட்டங்களுக்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறப்பட்டது.
 
அதை தொடர்ந்துதான்,   உதய் திட்டத்தை  ஆதரித்து அதில் கையெழுத்து இட மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி ஜனவரி 9ம் தேதி டெல்லிக்கு சென்றார். அதேபோல், அடுத்து நீட் திட்டத்திற்கும் ஒரிரு வருடங்களில் தமிழகத்தில் செயல்பாட்டுக்கு வரும் எனத் தெரிகிறது. 
 
இதுதான் சரியான நேரம் என தங்கள் திட்டங்களுக்கு தமிழக அரசின் ஒப்புதல் பெற மத்திய அரசும்,  முதல்வர் பதவியை ஏற்பதற்காக மத்திய அரசின் எந்த திட்டத்திற்கும் ஒப்புதல் அளிக்க சசிகலா தரப்பும் காய்கள் நகர்த்தின. ஒருவழியாக தற்போது எல்லாம் முடிந்து, தமிழக முதல்வர் பதவியில் அவர் நேரம் வந்துவிட்டதாக தெரிகிறது. 
 
அவரின் ஆஸ்தான ஜோதிடர் சூட்கேஸ் ஜமால் குறித்து கொடுத்த தேதிப்படி, வருகிற 19ம் தேதி அவர் முதல்வர் பதவியை ஏற்பார் என செய்திகள் வெளியாகியுள்ளது.