1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By Murugan
Last Modified: வெள்ளி, 10 பிப்ரவரி 2017 (18:44 IST)

சசிகலா பதவி நீக்கம் ; விரைவில் பொதுச்செயலாளர் தேர்தல் - மதுசூதனன் அதிரடி

சசிகலா வகித்து வரும் தற்காலிக பொதுச்செயலாளர் பதவியிலிருந்து அவரை நீக்கி விட்டதாக அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.


 

 
சசிகலாவிற்கு எதிராக, தமிழக முதலமைச்சர் போர்க்கொடி தூக்கியுள்ளார். அவருக்கு அதிமுகவின் பல மூத்த நிர்வாகிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். முக்கியமாக, எம்.ஜி.ஆர் காலத்திலிருந்து 50 வருடங்களாக, அதிமுக கட்சியில் இருக்கும், அவைத் தலைவர் மதுசூதனன் ஓ.பி.எஸ் அணியில் சேர்ந்து பலம் சேர்த்துள்ளார். இதனால், அவரை கட்சியிலிருந்து சசிகலா இன்று மாலை நீக்கம் செய்தார்.
 
இந்நிலையியில் இன்று மாலை ஓ.பி.எஸ் உடன் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மதுசூதனன் பேசியதாவது:
 
தற்காலிக பொதுச்செயலாளராக இருக்கும் சசிகலாவிற்கு என்னை நீக்கும் அதிகாரம் கிடையாது. அதேபோல், எம்.ஜி.ஆர் வகுத்த அதிமுக சட்ட விதிப்படி, தற்காலிக பொதுச்செயலாளர் என்ற பதவியே அதிமுகவில் கிடையாது. என்னை நீக்கியதாக அவர் கூறியுள்ளார். அதற்கு முன்பே நான் அவரை நீக்கி விட்டேன்.


 

 
எம்.ஜி.ஆர் வகுத்த சட்ட விதிப்படி, அடிமட்ட தொண்டர்கள் சேர்ந்துதான், பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க வேண்டும். எனவே, புதிய பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் விரைவில் நடைபெறும். அதேபோல், ஜெயலலிதா சேர்த்து வைத்த சொத்துக்களை பாதுகாக்க குழு அமைக்கப்படும்” என அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.