1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By sivalingam
Last Modified: வெள்ளி, 22 செப்டம்பர் 2017 (23:57 IST)

அரசியல் களத்தில் கமல் கரையேறுவாரா?

அரசியல் என்றால் என்ன என்றே தெரியாது என்றும், அரசியலே எனக்கு தெரியாது என்றும் போன வருடம் வரை சொன்னவர், இன்று அரசியலில் குதித்துவிட்டேன், தனிக்கட்சி ஆரம்பிக்க உள்ளேன், முதல் அமைச்சர் ஆக விருப்பம் என்று கூறியுள்ள கமலின் தைரியம் அசட்டு தைரியமா? அதீத நம்பிக்கையா?



 
 
முதலில் கமல் அரசியலுக்கு வர வேண்டிய அவசியம் என்ன? என்பதை பார்ப்போமா? ஊழலுக்கு எதிராக களம் இறங்கியுள்ளேன் என்று கூறியுள்ளார். அப்படியானால் கருணாநிதி, ஜெயலலிதா ஆட்சியின்போது ஊழலே நடக்கவில்லையா? அப்போது ஏன் கமல் பொங்கவில்லை?
 
சரி ஊழலுக்கு எதிராக களமிறங்கும் கமல் இதுவரை திமுகவின் ஊழலையோ, பாஜகவின் ஊழலையோ, காங்கிரஸ் கட்சியின் ஊழலையோ பேசவில்லையே ஏன்? அந்த கட்சிகள் ஊழலின் கரை இல்லாத கட்சியா?
 
கமலின் நோக்கம் தான் என்ன? இப்போதைக்கு அவருக்கு கைவசம் படம் எதுவும் இல்லை. சபாஷ் நாயுடு படம் ஏன் தொடரவில்லை என்பது அவருக்கு மட்டுமே தெரிந்த உண்மை. 'விஸ்வரூபம்' படம் எடுத்தபோது ஒருசில காட்சிகள் அதிகம் எடுத்த காட்சிகளை மட்டும் வைத்து கொண்டு 'விஸ்வரூபம் 2' படம் எடுத்துமுடித்துவிட்டதாக 4 வருடமாக கூறிகொண்டிருக்கின்றார். எனவே வேறு வேலை இல்லாத காரணத்தால் பரபரப்புக்காக அரசியல் ஸ்டண்ட் செய்கிறாரா?
 
ரஜினி, அஜித், விஜய் அளவுக்கு ரசிகர்கள் கமலுக்கு இல்லை. அவருடைய படம் மூன்றாவது நாளே கூட்டம் இருக்காது என்பதே இதற்கு உதாரணம். அவ்வாறு இருக்கையில் ஒரு கட்சி ஆரம்பித்து தொண்டர்களை உருவாக்குவது என்பது சுலபமான காரியமா?
 
மேலும் கமல் நாத்திகவாதி என்பதும் அவருக்கு ஒரு பெரிய மைனஸ். அதுவும் திகவினர் போலவே இந்துக்களை மட்டுமே கேலி கிண்டல் செய்யும் நாத்திகவாதி. இவரை நம்பி மக்கள் ஓட்டு போடுவார்களா?
 
இதற்கெல்லாம் விடை போக போகத்தான் கிடைக்கும். கமலின் அரசியல் படகு கரை சேருமா? என்பதை பொருத்திருந்து பார்ப்போம்