வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: செவ்வாய், 31 ஜனவரி 2017 (13:54 IST)

முன்னணி தலைவர்கள், அமைச்சர்களுடன் ரகசிய பேச்சு வார்த்தையா? - கொதிக்கும் தீபா

அதிமுகவின் முன்னணி தலைவர்கள் மற்றும் அமைச்சர்களுடன் ரகசிய பேச்சு வார்த்தை எதுவும் நான் பேசவில்லை என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா கூறியுள்ளார்.


 

கடந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியும், 25 ஆண்டு காலமாக அரசியல் ஆலோசகருமாக இருந்துவந்த சசிகலா அதிமுக பொதுச்செயலாளராக பதவியேற்றுக் கொண்டார்.

இதற்கிடையில், சசிகலா தலைமைப் பதவிக்கு எதிர்க்கும் சில அதிமுக நிர்வாகிகள், ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயராமின் மகளான தீபா தலைமைப் பதவிக்கு வரவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில், அதிமுக தொண்டர்கள் தினமும் தீபாவின் வீட்டிற்கு அவரை பார்ப்பதற்காக வருகின்றனர். அவர்களிடம் தீபா, அரசியலில் ஈடுபடுவது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடுவேன் என்று கூறியிருந்தார்.

இதற்கிடையில் சேலம், திருச்சி, கரூர், ஈரோடு, அரியலூர், பெரம்பலூர், சேலம், தஞ்சாவூர் என தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தீபா பேரவை ஆரம்பித்து, உறுப்பினர் சேர்க்கையையும், அதிமுகவினர் துவங்கினர்.

சேலத்தில், எம்ஜிஆர், ஜெயலலிதா அதிமுக என்ற பெயரில் புதிய இயக்கத்தையும் ஆரம்பித்து கொடி, சின்னம் ஆகியவற்றையும் அறிவித்து விட்டனர். இந்த இயக்கம் தீபா தலைமை தாங்கி நடத்துவதற்காக துவங்கப்பட்ட இயக்கம் எனவும் அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையில், ஒவ்வொரு மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் சிலரும். தங்களை ஜெ. தீபா பேரவையில் இணைத்துக் கொள்வதுடன், அப்பகுதியில் உள்ள அதிமுக தொண்டர்களை பலரையும் தீபா பேரவையில் இணைத்து வருகின்றனர்.

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய தீபா, “நான் அரசியலில் ஈடுபட இருப்பது எனது உறுதியான முடிவு. அதில் எந்த மாற்றமும் இல்லை. தினமும் எனது வீட்டின் முன்பு குவிகின்ற ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்களை பார்க்கிறேன்.

எனக்கு ஆதரவளிக்கும் மக்களின் நம்பிக்கையை குலைக்கும் வகையில் என்னை பற்றி வதந்திகளை பரப்பி வருகின்றனர். நான், அதிமுக முன்னணி தலைவர்கள் மற்றும் அமைச்சர்களுடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறி வருகிறார்கள். அதுபோன்ற பேச்சு வார்த்தை எதுவும் நான் பேசவில்லை" என்று தெரிவித்துள்ளார்.