1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By Abimukatheesh
Last Updated : வெள்ளி, 17 மார்ச் 2017 (20:09 IST)

இரட்டை இலை சின்னம் யாருக்கு? இரு அணியினர் நேரில் ஆஜராக உத்தரவு - தேர்தல் ஆணையம்

வரும் 22ஆம் தேதி காலை 10 மணிக்கு டெல்லி தலைமை தேர்தல் அணையத்தில் சசிகலா மற்றும் ஓபிஎஸ் தரப்பினர் நேரில் ஆஜராக வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.


 
 
சசிகலா அதிமுக பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என முதலில் ஓபிஎஸ் தரப்பினர் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தனர். அதைத்தொடர்ந்து சசிகலா இதுகுறித்து பதில் அளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. பின் சசிகலா தனது வழக்கறிஞர் மூலம் பதில் மனு அளித்தார்.
 
இதையடுத்து ஆர்.கே.நகர் தேர்தல் அறிக்கப்பட்டுள்ள நிலையில் ஓபிஎஸ் தரப்பில் இரட்டை சின்னம் எங்களுக்கு ஒதுக்க வேண்டும் என கோரி டெல்லி தலைமை தேர்தல் அதிகாரியை நேரில் சந்தித்து முறையிட்டனர். அதன்பிறகு இரட்டை இலை சின்னத்தை அவர்களுக்கு ஒதுக்க கூடாது என கூறி அமைச்சர் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்து பேசினார்.
 
இன்று தேர்தல் ஆணையம் ஓபிஎஸ் தரப்பு கோரிக்கை மனு நகலை இணைத்து சசிகலா பதில் அளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியது. இந்நிலையில் தற்போது தேர்தல் ஆணையம் அதிமுக இரு அணியினரையும் விசாரிக்க முடிவு செய்துள்ளது. 
 
இதனால் வரும் 22ஆம் தேதி காலை 10 மணிக்கு டெல்லி தலைமை தேர்தல் அணையத்தில் சசிகலா மற்றும் ஓபிஎஸ் தரப்பினர் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இந்த விசாரணைக்கு பின் யாருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்குவது என முடிவு செய்யப்படும் என்று கூறப்படுகிறது.