1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: புதன், 29 ஜூன் 2016 (16:09 IST)

தேமுதிக தேர்தலுக்காக வந்தார்கள்... சென்றார்கள்...; ஒரு பிரச்சினையும் இல்லை - சவுந்தர்ராஜன்

தேமுதிகவும், தமாகாவும் தேர்தலுக்காக வந்தார்கள். தேர்தல் முடிந்ததும் சென்று விட்டார்கள். அதனால் எந்த பிரச்சினையும் இல்லை என்று மாநில சி.ஐ.டி.யு. தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான சவுந்தர்ராஜன் கூறியுள்ளார்.
 

 
கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. அரங்கில், சி.ஐ.டி.யு. தமிழ் மாநில குழு கூட்டம் தொடங்கியது. அதில், சவுந்தர்ராஜன் கலந்து கொண்டார்.
 
முன்னதாக செய்தியாளர்களிடத்தில் பேசிய அவர், ”சென்னை நுங்கம்பாக்கத்தில் மாணவி சுவாதி படுகொலை செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது. வக்கீல் ரவி கொலையும் கண்டனத்துக்குரியது. இனிமேல் இதுபோல் நடை பெறாமல் இருக்க அரசு பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்.
 
வன்முறையில் ஈடுபடுபவர்களை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். காவல் துறைக்கு தெரியாமல் எதுவும் நடக்க முடியாது. காவல் துறை ரவுடிகளுக்கு துணை போகிறது.
 
மக்கள் நலக்கூட்டணி என்பது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் ஆகிய 4 கட்சிகள் சேர்ந்தது தான். தேமுதிகவும், தமாகாவும் தேர்தலுக்காக வந்தார்கள். தேர்தல் முடிந்ததும் சென்று விட்டார்கள். அதனால் எந்த பிரச்சினையும் இல்லை.
 
அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் சட்டசபை இடைத்தேர்தலிலும், உள்ளாட்சி தேர்தலிலும் மக்கள் நலக் கூட்டணி போட்டியிடும்.
 
மோடி அரசு பாதுகாப்பு துறையிலும், விண்வெளி துறையிலும் அந்நிய முதலீட்டை கட்டவிழ்த்து விட்டுள்ளது கண்டிக்கத்தக்கது. மீனவர் பிரச்சினை, ஜல்லிக்கட்டு பிரச்சினைகளில் மத்திய, மாநில அரசுகள் கவலைப்படவில்லை. மக்களை அவர்கள் ஏமாற்றுகிறார்கள்” என்று கூறியுள்ளார்.