1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By sivalingam
Last Modified: புதன், 14 ஜூன் 2017 (06:00 IST)

எடப்பாடி அரசை ரத்து செய்யுங்கள்: தமிழக கவர்னரிடம் அறப்போர் இயக்கம் மனு

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசை ஆதரிக்க பல எம்.எல்.ஏக்கள் கோடிக்கணக்கில் லஞ்சம் பெற்றதாக எம்.எல்.ஏ ஒருவரின் வீடியோ தமிழக அரசியலில் புயலை கிளப்பியுள்ள நிலையில் இதுகுறித்து தமிழக கவர்னரிடம் அறப்போர் இயக்கத்தினர் மனு ஒன்றை அளித்துள்ளனர். பணம் கொடுத்து விலைக்கு வாங்கப்பட்ட எம்.எல்.ஏக்களால் இந்த அரசு நடந்து கொண்டிருக்கின்றது, எனவே இந்த அரசை கலைக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.



 


இந்த நிலையில் இதுகுறித்து பேசிய  அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன், "தனியார் தொலைக்காட்சி வெளியிட்டுள்ள செய்தியில் சசிகலா தரப்பினர் எம்.எல்.ஏ-க்களுக்குப் பணம் பட்டுவாடா செய்ததைத் தெளிவாக வெளியிட்டுள்ளனர். எனவே நடந்து முடிந்து நம்பிக்கை வாக்கெடுப்பை ரத்து செய்ய வேண்டும் என்று மனுக் கொடுத்துள்ளோம்.

சசி ஆதரவு எம்.எல்.ஏ-க்களுக்குப் பணம் கொடுக்கப்பட்டதாகச் சொல்கிறபோது 278 கோடி ரூபாயில் இருந்து 1,340 கோடி ரூபாய் வரை கறுப்புப் பணப் பரிமாற்றம் நடந்திருப்பது தெரியவந்துள்ளது. இவ்வளவு பணம் எப்படி வந்தது உள்ளிட்ட தகவலைவைத்து சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியுள்ளோம்.

ஜனநாயகத்தைக் கேலிக்கூத்தாக்கும் செயல்களைச் செய்துள்ள இவர்கள்மீது சட்டரீதியான நடவடிக்கை வேண்டும் என்றும் நம்பிக்கை வாக்கெடுப்பைச் செல்லாததாக அறிவிக்க வேண்டும் என்றும் அதில் தெரிவித்துள்ளோம்'' என்றார்.