1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By Murugan
Last Modified: புதன், 11 ஜனவரி 2017 (15:24 IST)

தீபா பற்றி விசாரித்த மத்திய அரசு - சசிகலா தரப்பு அதிர்ச்சி

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெ.வின் அண்ணன் தீபாவின் அரசியல் வளர்ச்சி குறித்து, பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, தமிழக பாஜக தலைவர்களிடம் விசாரித்த விவகாரம் சசிகலா தரப்பிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது.


 

 
ஜெ.வின் மறைவிற்கு பின், அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டுள்ளார். விரைவில் அவர் தமிழக முதல்வராக அறிவிக்கப்படலாம் எனத் தெரிகிறது. அவரின் தலைமையை பிடிக்காத அதிமுகவினர் தீபாவை ஆதரித்து வருகின்றனர்.
 
தமிழகத்தின் பல மாவட்டங்களில், குறிப்பாக தென் மாவட்டங்கள் மற்றும் கொங்கு மண்டலங்களில் அவருக்கு ஆதரவு பெருகி வருகிறது. அவருக்கு ஆதரவாக போஸ்டர்கள், பேனர்களை வைத்து, அதிமுக நிர்வாகிகள் வைத்து வருகின்றனர். மேலும், அந்த பகுதியில் வைக்கப்பட்டிருக்கும் சசிகலாவின் போஸ்டர்கள் கிழிக்கப்பட்டு வருகிறது. 
 
தீபா பெயரில் பேரவைகள் உருவாக்கப்பட்டு அதில் ஆள் சேர்க்கும் பணிகளிலும் அவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். சில இடங்களில் தீபா பெயரில் புதிய கட்சியையும் அவர்கள் ஆரம்பித்துவிட்டனர். மேலும், சென்னையில் உள்ள தீபாவின் வீட்டிற்கு சென்று அவரை அரசியலுக்கு வரும்படி தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவையொட்டி வருகிற 17ம் தேதி தனது அரசியல் பயணம் தொடரும் என தீபாவும் அறித்துள்ளார்.
 
இந்நிலையில், பாஜக தேசிய செயற்குழு கூட்டம் சமீபத்தில் டெல்லியில் நடந்தது. அதில் தமிழகத்தின் சார்பில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மாநில பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், இல.கணேசன், எச்.ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 
அவர்களிடம் தமிழக அரசியல் சூழ்நிலை குறித்து பாஜக தலைவர் அமித்ஷா ஆலோசனை நடத்தினார். தமிழக முதல்வர் ஓ.பி.எஸ், சசிகலா ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து அவர் கேட்டறிந்தார். மேலும், தீபாவை பற்றியும் அவர் விசாரித்துள்ளார். அவரது வீட்டின் முன்பு குவியும் தொண்டர்கள், அவரின் மனநிலை, அரசியல் பிரவேசம், அவருக்கு உதவி செய்பவர்கள், தொண்டர்களிடையே அவருக்கு உள்ள ஆதரவு, அவரின் பின்னணி ஆகியவை பற்றி விரிவாக கேட்டறிந்துள்ளார்.
 
தனக்கு எதிராக தீபா களம் இறங்குவது சசிகலா தரப்பிற்கு ஏற்கனவே கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதில்  மத்திய அரசு தீபாவைப் பற்றி விசாரித்தது, அவர்களுக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.