1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By Murugan
Last Updated : வியாழன், 12 ஜனவரி 2017 (10:38 IST)

தீபா ஆதரவாளர்கள் கூட்டத்தை நடத்த விடாமல் மிரட்டல் : அதிமுகவினர் அட்டூழியம்

சென்னையில் திருமண மண்டபத்தில் நடக்கவிருந்த தீபா ஆதரவாளர்கள் கூட்டத்தை, அந்த பகுதி அதிமுகவினர் நடத்த விடாமல் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.


 

 
ஜெ.வின் மறைவிற்கு பின், அவரின் நீண்ட நாள் தோழி சசிகலா அதிமுக பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார். விரைவில் அவர் தமிழகத்தின் முதல்வர் பதவியிலும் அமர்வார் எனத் தெரிகிறது. ஆனால், பெரும்பாலான மாவட்ட நிர்வாகிகள் மற்றும் அடிமட்ட தொண்டர்கள் மத்தியில் அவருக்கு ஆதரவு இல்லை எனத் தெரிகிறது.  
 
அதில் பலர் தீபாவிற்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். தீபா பெயரில் பேரவைகள் உருவாக்கப்பட்டு, நிர்வாகிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர். பல இடங்களில் தீபா பேனர், போஸ்டர் என களை கட்டுகிறது. சில இடங்களில் தீபா பெயரில் புதிய கட்சியையும் அவர்கள் ஆரம்பித்துவிட்டனர். மேலும், சென்னையில் உள்ள தீபாவின் வீட்டிற்கு சென்று அவரை அரசியலுக்கு வரும்படி தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவையொட்டு வருகிற 17ம் தேதி தனது அரசியல் பயணம் தொடரும் என தீபாவும் அறிவித்துள்ளார்.  
 
இந்நிலையில், தீபாவின் ஆதரவாளர்கள் சென்னை, நங்கநல்லூரில் உள்ள கே.சி.டி. திருமண மண்டபத்தில் நேற்று மாலை ஆலோசனைக் கூட்டத்தை நடத்துவதாக அறிவிக்கப்பட்டது. அதற்காக போலீசார் அனுமதியும் பெறப்பட்டது. அந்த கூட்டத்தில் சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களை சேர்ந்த தீபாவின் ஆதரவாளர்களும், வெளிமாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகளும் கலந்து கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டது. நேற்று காலை மண்டபத்தை சுற்றி தீபா பேரவை கொடி நாட்டப்பட்டது. 
 
தீபாவின் ஆதரவாளர்கள் வெளி மாவட்டங்களில் மட்டுமே இதுவரை ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வந்தனர். இந்நிலையில், சென்னையிலும் அவருக்கு ஆதரவாக கூட்டம் நடத்தப்படுவது அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது.
 
இந்நிலையில், நேற்று மதியம் ஆலந்தூர் பகுதி முன்னாள் எம்.எல்.ஏ வெங்கட்ராமன், தன்னுடைய அடியாட்களுடன் சென்று அந்த கொடிகளை அகற்றினர். தொடர்ந்து மண்டப உரிமையாளரையும் அவர்கள் மிரட்டினர். மாலை 3 மணியளவில் தீபாவின் ஆதரவாளர்கள் சுமார் 300 பேர் அங்கு கூடினர். மண்டபத்திற்குள் அவர்கள் அனுமதிக்கப்படாததால், அதன் வாசலிலேயே அவர்கள் கூட்டத்தை நடத்தினர். தீபாவிற்கு ஆதரவாக கோஷம் எழுப்பினர். கூட்டம் அதிகரித்ததால் அந்த சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. 

அதிமுகவினர் என்ன அட்டூழியம் செய்தாலும், தீபா அரசியலுக்கு வருவதை தடுக்க முடியாது. அவருக்கு ஆதரவாக நாங்கள் நிற்போம் என தீபாவின் ஆதரவாளர்கள் சூளுரைத்தனர்.