உலகத் தரம்… உள்ளூர் கதை… தனது அடுத்த படம் பற்றி மனம் திறந்த அல்லு அர்ஜுன்!
அட்லி இயக்கத்தில் இதுவரை வெளியாகி இருப்பது ஐந்தே படங்கள்தான். ஆனால் அந்த படங்களின் வெற்றி காரணமாக இன்று இந்திய அளவில் அறியப்பட்ட இயக்குனராக இருக்கிறார். தற்போது அல்லு அர்ஜுனை வைத்து பிரம்மாண்டமாக ஒரு அறிவியல் புனைகதைப் படத்தை உருவாக்கி வருகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது; சாய் அப்யங்கர் இசையமைக்க, ஜி கே விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார்.
அமெரிக்காவில் படத்துக்கான லுக் டெஸ்ட் நடைபெற்றது. தற்போது மும்பையில் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படத்தில் தீபிகா படுகோன், ராஷ்மிகா மந்தனா, ஜான்வி கபூர், மிருனாள் தாக்கூர் என பல ஹீரோயின்கள் நடிப்பதாக சொல்லப்படுகிறது. இந்த படம் சுமார் 700 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இந்தியாவிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்படுகிறது.
அதனால் இந்த படத்தை இந்தியாவைத் தாண்டியும் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாம் சன் பிக்சர்ஸ் நிறுவனம். அதனால் ஹாலிவுட்டின் முன்னணி ஸ்டுடியோவான வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்த படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் சமீபத்தில் கலந்துகொண்ட ஒரு உரையாடல் நிகழ்ச்சியில் இந்த படம் பற்றி அல்லு அர்ஜுன் பேசியுள்ளார்.
அதில் “இந்த படத்தின் கதையை சொன்னவுடன் எனக்கு மிகவும் பிடித்தது. அட்லி ஜவான் போன்ற பேன் இந்தியா ஹிட் கொடுத்தவர். இந்த படத்தின் தரம் உலகளவில் இருக்கும். ஆனால் கதை இந்தியத் தன்மை கொண்டதாக இருக்கும். ஏனென்றால் இது ஒரு இந்திய படம்” எனக் கூறியுள்ளார்.