ஞாயிறு, 29 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : ஞாயிறு, 29 செப்டம்பர் 2024 (10:57 IST)

வாரிசு அரசியல் பற்றி யார் பேசலாம் - பேசக்கூடாது.! அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில்..!!

Subramaniyan
வாரிசு இல்லாதவர்கள் வாரிசு அரசியல் பற்றி கேட்கலாம் என்றும் வாரிசு உள்ளவர்கள் வாரிசு அரசியல் பற்றி பேசக்கூடாது என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
 
சென்னை தீவுத்திடலில் நடைபெற்ற போதை பொருள் இல்லாத சமூகத்திற்கான விழிப்புணர்வு மாரத்தான் போட்டியை  மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.  
 
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், உதயநிதிக்கு எப்பொழுது துணை முதலமைச்சர் பொறுப்பு  வழங்கப்படும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர் என்றும் பொதுமக்கள் மட்டுமல்ல திமுகவினரின் அத்தனை எதிர்பார்ப்புகளையும் முதலமைச்சர் நிறைவேற்றி இருக்கிறார் என்றும் தெரிவித்தார்.
 
தமிழ்நாட்டின் வரலாற்றில் இன்று மகிழ்ச்சி மிக்க நாள் என்று கூறிய அவர்,  விளையாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி பொறுப்பேற்ற பிறகு, விளையாட்டுத்துறையின் உலக அளவில் தமிழ்நாடு தலைமையகமாக மாற்றி தந்து உள்ளார் என்றும் பெருமிதம் தெரிவித்தார்.
 
2 கோடி இளைஞர்களின் மிகப்பெரிய விழிப்புணர்வாக விளையாட்டுத்துறையை மிகச் சிறப்பாக வழிநடத்தி கொண்டு இருக்கிறார் என்றும் விளையாட்டில் சிறந்து விளங்குபவர்களுக்கு நிதி தருவது மட்டுமல்லாமல், எழிமை நிலையில் இருப்பவர்களுக்கு பொருளாதார ரிதியான உதவிகளையும் வழங்கி வருகிறார் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
 
நாடாளுமன்றத் தேர்தலில் எப்படி 40-க்கு 40 தொகுதி வெற்றி பெற்றோமோ அதுபோல் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது என்று அவர்  தெரிவித்தார்.

 
வாரிசு இல்லாதவர்கள் வாரிசு அரசியல் பற்றி கேட்கலாம் என்றும் வாரிசு உள்ளவர்கள் வாரிசு அரசியல் பற்றி பேசக்கூடாது என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் குறிப்பிட்டார்.