வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 9 ஜனவரி 2019 (10:49 IST)

மக்களவையில் தமிழகத்தின் குரலாக ஒலித்த தம்பிதுரை – முழுப்பேச்சு தமிழில்

பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டுக்கு எதிராக அதிமுக மக்களவை துணைசபாநாயகர் தம்பித்துரை பேசியுள்ளார்.
 

அதிமுக அமைச்சர்கள் என்றாலே தெர்மாக்கோல் போட்டு ஆற்றை மறைத்தவர், மக்கள் சோப் போட்டு குளிப்பதால்தான் ஆறு அசுத்தமாகிறது என்று சொன்னவர் போன்றவர்களின் முகங்களே நமக்கு நினைவுக்கு வரும். அதையெல்லாம் அடித்து நொறுக்கும் விதமாக கடந்த சில தினங்களாக மக்களவையில் அசத்தி வருகிறார் அதிமுக எம்.பி. தம்பிதுரை.

இதுவரையில் இந்தியாவில் சாதி அடிப்படையில் மட்டுமே இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வரும் நிலையில் பிரதமர் மோடி தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள பொது பிரிவினருக்குக் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு இந்தியா முழுவதும் உள்ள கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் உள்ள பிரதானக் கட்சிகளான திமுக, விடுதலை சிறுத்தைகள், பாமக ஆகியக் கட்சிக்ளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தமிழகத்தை அளும் கட்சியான அதிமுக தலைமை இதுவரை எந்த எதிர்ப்பும் தெரிவிக்காத நிலையில் மக்களவையில் இது தொடர்பாக தனது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார் அதிமுக எம்.பி.யும் மக்களவைத் துணை சபாநாயகருமான தம்பிதுரை.

மக்களவையில் இந்த தீர்மானத்திற்கு எதிராக அவரின் நேற்றைய பேச்சுதான் இந்திய அரசியலின் ஹாட் டாபிக். ஏன் சாதி ரீதியாக மட்டும் இடஒதுக்கீடு வேண்டும் என்பது தொடர்பான அவரது ஆங்கில பேச்சின் சுருகமான தமிழ்ப் மொழிப்பெயர்ப்பு :-

’எதற்காக இந்த இட ஒதுக்கீடு? நான் சூத்திரன். நாங்கள் சூத்திரர்கள். நாங்கள் ஒடுக்கப்பட்டோம். அதனால்தான் திராவிட இயக்கம் இட ஒதுக்கீட்டுக்காக போராடியது. பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு நிறைய நலத்திட்டங்கள் ஏற்கனவே உள்ளன. எதற்காக அவர்களுக்குத் தனியாக இட ஒதுக்கீடு? இந்த இட ஒதுக்கீட்டின் பொருள் அத்தகைய திட்டங்கள் சரியாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதா?

அம்பேத்கர் நிறைய படித்தவர்தான். ஆனால் அவர் சாதிய அடிப்படையில்தான் ஒடுக்கப்பட்டார். அதனால்தான் நம்முடைய முன்னோர்கள் பொருளாதாரத்தை விட சாதியை சமூகநீதிக்கான அளவுகோலாகக் கொண்டார்கள்.நீங்கள் வேண்டுமானால் தமிழ்நாட்டைப் பின்பற்றி இட ஒதுக்கீட்டை 70 சதமாக உயர்த்துங்கள். நாங்கள் 69 சதவிகிதம் இடஒதுக்கீட்டை நடைமுறைப் படுத்துகிறோம்.

இப்போதும் தீண்டாமை கடைபிடிக்கபப்டுகிறது. இரட்டைக் குவளை முறை இருக்கிறது. சாதி என்று ஒன்று இருக்கிற வரை இடஒதுக்கீடு என்பது தொடரவே வேண்டும்.ஒவ்வொருவருடைய கணக்கிலும் 15 லட்ச ரூபாய் செலுத்துவோம் என்று பிரதமர் வாக்குறுதியளித்தார். அதை நிறைவேற்றியிருந்தால் இத்தகைய பொருளாதார இட ஒதுக்கீட்டுக்கு அவசியமே வந்திருக்காது. இன்று ஏழையாக இருப்பவன் நாளை பணக்காரனாவான். இந்த இட ஒதுக்கீட்டை எப்படி அமல்படுத்துவீர்கள்? இதன் மூலம் ஊழல்தான் அதிகரிக்கும்.’

(*தமிழ் மொழிப்பெயர்ப்பு எழுத்தாளர் கார்ல் மாக்ஸ் கணபதி அவர்களுடையது)