நாளை விசாரணைக்கு வர முடியாது.. முடிந்ததை பார்த்து கொள்ளுங்கள்: சீமான்
நாளை காலை 11 மணிக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என காவல்துறையினர் சம்மன் அனுப்பிய நிலையில், "ஆஜராக முடியாது, உங்களால் முடிந்ததை பார்த்துக் கொள்ளுங்கள்" என்று அவர் பேட்டி அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமான், தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி புகார் அளித்தார். இந்த புகார் குறித்து சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில், நாளை காலை 11 மணிக்கு ஆஜராக வேண்டும் என்று சீமான் வீட்டுக்கு சம்மன் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
விசாரணைக்கு ஒத்துழைக்காவிட்டால் கைது செய்ய நேரிடும் என்றும் காவல்துறையினர் கூறியுள்ளனர்.
இந்த நிலையில் பேட்டியளித்த சீமான், "காவல்துறை ஏன் இந்த அவசரம்? அண்ணா பல்கலைக்கழக விவகாரம் உட்பட வேறு எந்த பிரச்சனையிலும் அவர்கள் இந்த தீவிரத்தை காட்டியுள்ளார்களா? ஒரு பெண்ணை வைத்து என்னை அடக்க முயற்சி செய்கிறார்கள். நாளை விசாரணைக்கு ஆஜராக முடியாது, உங்களால் முடிந்ததை பார்த்துக் கொள்ளுங்கள். சம்பந்தப்பட்ட அந்த பெண்ணையும் என்னையும் ஒன்றாக வைத்து விசாரிக்க வேண்டும். முதலில் விசாரித்ததை மீண்டும் மீண்டும் விசாரிக்கிறீர்கள்" என்று கூறியுள்ளார்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Siva