1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. PM Modi incites religious riots..! Congress case in Madras High Court..!

மத கலவரத்தை தூண்டுகிறார் பிரதமர் மோடி..! சென்னை உயர்நீதிமன்றத்தில் காங்கிரஸ் வழக்கு..!

highcourt
தேர்தல் பிரச்சாரத்தின் போது மதக் கலவரத்தை தூண்டும் வகையில் பிரதமர் மோடி பேசி வருவதாக கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வழக்கு தொடர்ந்துள்ளார். 
 
நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த மனுவில்,  இந்துக்களின் சொத்துக்களை பிடிங்கி இஸ்லாமியர்களுக்கு வழங்கி விடுவார்கள் என்றும் அதிக குழந்தைகளை அவர்கள் பெற்றுக்கொள்கிறார்கள் என்றும் ராஜஸ்தானில் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாக குறிப்பிட்டுள்ளார்.
 
அதேபோல தேர்தல் அறிக்கையை முஸ்லீம் லீக் கட்சியின் தேர்தல் அறிக்கை என்று பிரதமர் விமர்சித்திருப்பதாகவும் மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார். இவ்வாறு ஒவ்வொரு இடத்திலேயும், வெறுப்புணர்வை பேசி மதக்கலவரத்தை தூண்டும் வகையில் பிரதமர் மோடியின் பேச்சு இருப்பதாகவும், இதுகுறித்து முறையாக தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் மனுவில் குற்றம்சாட்டியுள்ளார். எனவே தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று செல்வப்பெருந்தகை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.
 
இந்த மனு நீதிபதிகள் ஜெகதீஷ் சந்திரா, கலைமதி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, காங்கிரஸ் கட்சி சார்பில் வழக்கறிஞர்கள் சூரியபிரகாசம், விக்டர் ஆகியோர் ஆஜராகி, பிரதமர் பெயரை சேர்த்துள்ளதால் வழக்கை எண்ணிட மறுப்பதாக புகார் தெரிவித்தனர்.


எனவே இந்த வழக்கை எண்ணிட்டு உடனடியாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டனர். இதையடுத்து நீதிபதிகள், உடனடியாக குறைகளை நிவர்த்தி செய்து மீண்டும் மனு தாக்கல் செய்யுங்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்கிறோம் என தெரிவித்தனர்.
About Writer
Senthil Velan