சுப்ரீம் கோர்ட் சென்ற கரூர் சம்பவத்தில் உயிரிழந்த சிறுவனின் தந்தை! என்ன கோரிக்கை?
தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய்யின் கரூர் பேரணியில் நடந்த துயரமான கூட்ட நெரிசலில் தனது 13 வயது மகனை பறிகொடுத்த தந்தை, இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரி உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி வேலுசாமிபுரத்தில் நடந்த தவெக பேரணியில், கூட்ட நெரிசல் காரணமாகக் குறைந்தது 41 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட மறுத்த சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவை, அக்டோபர் 10ஆம் தேதி விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் நேற்று ஒப்புக்கொண்டது.
முன்னதாக, உயர் நீதிமன்றம் சிபிஐ விசாரணை கோரிய மனுக்களைத் தள்ளுபடி செய்துவிட்டு, மூத்த ஐபிஎஸ் அதிகாரி அஸ்ரா கார்க் தலைமையில் ஒரு சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்து விசாரிக்க உத்தரவிட்டிருந்தது.
அரங்கில் திரண்ட கூட்டம், எதிர்பார்க்கப்பட்டதை விட மூன்று மடங்கு அதிகம் என்று நீதிபதிகள் சுட்டிக் காட்டியதோடு, த.வெ.க. தலைமை மற்றும் காவல்துறையினரையும் கண்டித்திருந்தனர். நடிகர் விஜய் ஏழு மணி நேரம் தாமதமாக வந்ததே குழப்பத்திற்கும் நெரிசலுக்கும் முக்கிய காரணம் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
Edited by Mahendran